Skip to main content

அரசு ஊழியர் கொலை; நீதிமன்றத்தில் சரணடைந்த பாதிரியார் 

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
Priest surrenders in court in Kanyakumari government employee case
சேவியா் குமாா்

கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் சந்தை அருகே உள்ளது மைலோடி. இப்பகுதியில், 'மிக்கேல் அதிதூதர் ஆலயம்' ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், பாதிரியாராக ராபின்சன் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். அதே ஆலயத்தில் உறுப்பினராக சேவியர் குமார் என்பவர் இருந்து வந்தார். 45 வயதான சேவியர் குமார் மைலோடு மடத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர். நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவரான இவர், அரசு போக்குவரத்துகழக கன்னியாகுமரி பணிமனையில் மெக்கானிக்காகவும் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜெமினி. 40 வயதான ஜெமினி, மிக்கேல் அதிதூதர் ஆலயத்தின் கீழ் செயல்படும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலைசெய்து வந்துள்ளார். 

இந்த நிலையில், சேவியர் குமார் ஆலயத்தின் கணக்கு வழக்குகளில் இருந்த குளறுபடிகளை ஆலயத்திற்கான 'வாட்ஸ்அப் குழு' மற்றும் சமூக வளைதளத்தில் பதிவிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இது ஆலய நிர்வாகிகளை அதிருப்தி அடைய செய்து இருக்கிறது. தொடர்ந்து, சேவியர் குமார் ஆலய கணக்குகளின் குளறுபடிகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வர, ஆலயத்தில் மற்றொரு உறுப்பினராக இருந்த எம். ஆர்.ரமேஷ் பாபுக்கும், சேவியர் குமாருக்கும் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. எம்.ஆர்.ரமேஷ் பாபு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், தக்கலை திமுக ஒன்றிய கழகச் செயலாளராக இருந்து வருகிறார். ஒருகட்டத்தில், எம்.ஆர்.ரமேஷ் பாபுக்கும், சேவியர் குமாருக்கு தகராறு முற்ற, எம்.ஆர்.ரமேஷ் பாபு தனது கட்சி செல்வாக்கை பயன்படுத்தி பால்வளத்துறை அமைச்சர் பரிந்துரையில், திங்கள்சந்தை பணிமனையில் வேலை செய்து கொண்டிருந்த சேவியர் குமாரை கன்னியாகுமரி பணிமனைக்கு பணி மாற்றம் செய்தாக கூறப்படுகிறது.

Priest surrenders in court in Kanyakumari government employee case
ரமேஷ் பாபு

மேலும், ஆலய செல்வாக்கை பயன்படுத்தி ஆலயத்திற்கு கீழ் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் சேவியர் குமாரின் மனைவி ஜெமினிக்கு மெமோ கொடுத்து சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சேவியர் குமார் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால், மீண்டும் பள்ளியில் பணியில் சேர்ப்பதாக நிர்வாகத்தினர் மனைவி ஜெமினியிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், இதையும் சேர்த்து சேவியர் குமார் வாட்ஸ்அப் குழுவில் தெரிவித்து அவதூறாக பதிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஜனவரி 20 ஆம் தேதி பேசுவதற்காக சேவியர் குமாரை தூய மிக்கேல் அதிதூதர் ஆலய வளாகத்திலுள்ள பங்குத்தந்தை இல்லத்திற்கு வருமாறு பங்குத்தந்தை ராபின்சன் அழைத்துள்ளார். 

ad

இதையடுத்து, சந்திக்க வந்த சேவியர் குமாரிடம் ராபின்சன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்ற, சேவியர் குமாரை பங்குதந்தை ராபின்சன் மற்றும் அங்கிருந்தவர்கள் 'அயர்ன் பாக்ஸால்' அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கொலை செய்ததற்கான ஆதாரத்தை மறைக்கும் நோக்கில் அந்த கும்பல் கண்காணிப்பு கேமரா பதிவை எடுத்துக் கொண்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட சேவியர் குமாரின் உறவினர்கள் மற்றும்  பொதுமக்கள்  ஆலயத்தில் குவிந்தனர். உடனே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் காவல் துறையினர் உடலை எடுக்க முற்பட்டனர். ஆனால், உடலை எடுக்க விடாமல் முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் மற்றும் சேவியர் குமார் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சேவியர் குமார் கொலை தொடர்பாக மைலோடைச் சேர்ந்த தக்கலை ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ் பாபு, மைலோடு பாதிரியார் ராபின்சன், முரசங்கோடு பாதிரியார் பெனிட்டோ உள்ளிட்ட 15 பேர் மீது கொலை உட்பட 9 பிரிவுகளில் இரணியல் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு உறவினர்கள் போலீசாரிடம் உடலை ஒப்படைத்தனர். 

Priest surrenders in court in Kanyakumari government employee case
ராபின்சன்

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய வின்சென்ட் மற்றும் ஜெஸ்டஸ் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், தனிப்படை அமைத்து முக்கிய குற்றவாளியான பங்கு தந்தை மற்றும் திமுக பிரமுகரை தேடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து பங்குத்தந்தை ராபின்சன், ஆலயத்தில் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, ''கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், தக்கலை ஒன்றிய கழகச் செயலாளராக செயல்பட்டு வந்த எம். ஆர்.ரமேஷ் பாபு கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட காரணத்தினால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக நீக்கிப்பட்டார்'', என திமுக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு வெளியிட்டார். தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையில், கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பாதிரியார் கோர்ட்டில் சரணடைய திட்டமிட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் கோர்ட்டுகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வழக்கில் தேடப்பட்ட பாதிரியார் ராபின்சன் இன்று காலை திருச்செந்தூர் கோர்ட்டில் சரணடைந்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆவடியில் இரட்டைக் கொலை; போலீசாரிடம் சிக்கிய செல்போன்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
aavadi siddha doctor and his wife incident Cell phone caught by the police

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்துள்ள மிட்டனமல்லியில் சித்த மருத்துவர் சிவன் நாயர் என்பவரும், அவரது மனைவி பிரசன்னகுமாரி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இத்தகைய சூழலில் அவரது இல்லத்திற்கு சிகிச்சைக்கு வருவதுபோல் நேற்று (28.04.2024) இரவு வீட்டிற்குள் மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். அதன்பின்னர் சித்த மருத்துவர் சிவன் நாயரையும் அவரது மனைவி பிரசன்னகுமாரியையும் மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாராணை மேற்கொண்டனர். அப்போது இந்த இரட்டைக் கொலை நடந்த இடத்தில் செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதோடு கொலையான மருத்துவரிடம் சிகிச்சை பெற வந்தவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கொலையாளிகள் பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி அருகே சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி கழுத்து அறுத்து கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தேவகவுடா மகன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Deve Gowda's son issue in karnataka 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இத்தகைய சூழலில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

Deve Gowda's son issue in karnataka 

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் அவரைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Deve Gowda's son issue in karnataka 

இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எச்.டி.ரேவண்ணா வீட்டில் பணியாற்றும் சமையலர் அளித்த புகாரின் பேரில் ரேவண்ணா மீது பாலியல் சீண்டல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹோலேநர்சிபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மீது ஏற்கெனவே பாலியல் புகார் உள்ள நிலையில் தற்போது தந்தை மீதும் பாலியல் புகார் எழுந்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.