Skip to main content

“234 தொகுதிகளிலும் போட்டியிட தே.மு.தி.க தயாராக உள்ளது..” - பிரேமலதா விஜயகாந்த்!

Published on 10/12/2020 | Edited on 10/12/2020

 

Premalatha vijayakanth press meet at theni


தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியில் தே.மு.தி.க ஒன்றிய கவுன்சிலர் திருமண விழாவில், தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று, திருமணத்தை நடத்தி வைத்தார்.

 

இந்தத் திருமண விழாவிற்குப் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “வருகிற சட்டமன்றத் தேர்தலில், தே.மு.தி.க 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்குத் தயார் நிலையில் உள்ளது. இந்த நிமிடம் வரையில், நாங்கள் அ.தி.மு.க கூட்டணியிலேயே தொடர்கிறோம். வருகின்ற, ஜனவரி மாதம் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் முடிவு எடுத்து, கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் அறிவிப்பார். தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் ஈடுபட உள்ளோம். கிளைமேக்ஸில் விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வருவார். 


ரஜினகாந்த் கட்சி ஆரம்பிப்பது குறித்து கேட்டபோது, இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால், அதன்பின்னர் ஏற்படும் பல சோதனைகள், வேதனைகள் இடர்பாடுகளைக் கடந்து சாதனை படைப்பது மிகுந்த கஷ்டமான காரியம். முதலில் அவர் கட்சி ஆரம்பித்து, பெயர், சின்னம் அறிவிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளட்டும். அதன்பின்னர், பேசுகிறேன். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க போட்டியிடும் அத்தனை தொகுதியிலும் வெற்றி பெற்று, மக்கள் நலப் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்வோம். மக்களுக்கான கட்சி தே.மு.தி.க.

 

தே.மு.தி.க என்றும் விவசாயிகளுக்கு ஆதரவான கட்சிதான். டெல்லியில் போராடும் பஞ்சாப் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் விவசாயிகளும் இறங்கி வரவேண்டும். டெல்லி விவசாயிகள் போராட்டத்தை வைத்து, அரசியல் செய்யப்படுகிறது. 'நிவர்', 'புரவி' ஆகிய புயல் தாக்கத்தின்போது, தமிழக அரசின் செயல்பாடுகளில் நிறையும், குறையும் உள்ளது. இந்த இயற்கைச் சீற்றத்தில் உயிர்ப்பலி ஏற்படவில்லை. மக்கள் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டனர். உணவு வழங்கப்பட்டது என்பது ஆறுதலான விஷயம். அதே நேரத்தில் குறை என்று சொன்னால் போதுமான வடிகால் வசதி இல்லை. நீர்நிலைகள் தூர்வாரப்படாததால், வெள்ள நீர் வீணாகக் கடலில் கலந்துள்ளது. இதனைச் சரிசெய்யும் கடமை அரசுக்குத்தான் உள்ளது” என்று கூறினார். பேட்டியின்போது மாவட்ட, நகர, ஒன்றியப் பொருளாளர்கள் பலர், உடன் இருந்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.