தமிழ்நாட்டில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (04/10/2021) மாலை 05.00 மணியுடன் நிறைவுபெறுகிறது. இன்று மாலை 05.00 மணிக்கு மேல் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்குத் தொடர்பு இல்லாத நபர்கள் ஊராட்சிகளில் இருந்து வெளியேற வேண்டும். வரும் அக்டோபர் 6ஆம் தேதி வரை முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள், பார்களைத் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உள்பட ஒன்பது மாவட்டங்களில் ஏற்கனவே 3,346 வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் ஒன்பது மாவட்டங்களிலும் 24,417 பதவிகளுக்கு 80,819 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 9ஆம் தேதியும் நடக்கிறது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி அக்டோபர் 12ஆம் தேதி காலை 08.00 மணிக்குத் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.