Skip to main content

ஆட்சியர் அலுவலகம் முன்பு கர்ப்பிணிப் பெண் 12 மணி நேரம் போராட்டம்...

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

Pregnant woman waited 12 hours in front of the Collector's Office ...

 

 

பெரம்பலூர் மாவட்டம் இரூர் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி சவீதா. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சத்துணவு அமைப்பாளர் பணி கிடைத்துள்ளது. அதன்படி இவர் ஆலத்தூர் ஒன்றியம் சிறுகன்பூர் என்ற கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அமைப்பாளராக பணியில் சேர்ந்துள்ளார். அப்போதுமுதல் அந்தப் பள்ளிக்கு தினசரி சென்று தனது பணியை செய்து  வந்துள்ளார். 

 

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான இரூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு பொறுப்பாளர் பணியிடம் காலியாக இருந்ததால் அந்தப் பள்ளியின் பொறுப்பும் கூடுதலாக சவிதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனையும் ஏற்று பணியை தொடர்ந்து பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தற்போது சவீதா 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். எனவே தன்னால் சிறுகன்பூர் பள்ளிக்கு சென்று வருவது சிரமமாக உள்ளது. அதனால் தற்போது கூடுதல் பொறுப்பாக பணி செய்துவரும் இரூர் பள்ளியிலேயே தனக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். 

 

அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் ஆட்சியரின் சத்துணவு நேர்முக உதவியாளர் உட்பட பல அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் பலமுறை நேரில் வந்தும் பணிமாறுதல் கேட்டுள்ளார். இவரை பலமுறை அதிகாரிகள் அலைக்கழிக்க வைத்துள்ளனர்.  ஆனால், பணி மாறுதல் உத்தரவு மட்டும் வழங்கவில்லை. இந்த நிலையில் சில நாட்களுக்குமுன்பு மனம் நொந்த சவீதா, மாவட்ட ஆட்சியர் அலுவலக மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறியுள்ளார். 

 

அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தி நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரனை வந்து சந்திக்குமாறு கூறி அனுப்பி உள்ளனர். அதன்படி நேற்று காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரனை சந்திப்பதற்காக வந்து காத்திருந்தார். அங்கிருந்து அலுவலர்களிடம் தன்னை மாவட்ட வருவாய் அதிகாரி வந்து சந்திக்குமாறு அழைத்து இருந்தனர். அவரை நான் நேரில் சந்திக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். கொஞ்ச நேரம் பொறுத்து இருங்கள் அவரைப் பார்க்க அழைக்கிறோம் என்று அங்கிருந்த அலுவலர்கள் கூறியுள்ளனர். ஆனால், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சவீதாவை சந்திக்க அழைக்காமல் அலுவலகத்தை பூட்டிவிட்டு அனைவரும் புறப்பட்டு சென்றுவிட்டனர். 

 

வேதனை அடைந்த கர்ப்பிணிப் பெண்ணான சவீதா, இரவு 10 மணி வரை  அதிகாரி அறையின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இரவு நேரத்தில் அதிகாரி அலுவலக வாசலில் தனியாக அமர்ந்து தர்ணா போராட்டம் செய்யும் தகவல் பரவியது. இதையடுத்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஒன்றுகூடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சவீதாவிற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியுள்ளனர்.  இதை அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்தனர். அவர்களிடம் தனது நிலைமையை எடுத்துக் கூறி கதறி அழுதுள்ளார் சவீதா. விரைவில் பணி மாறுதல் வழங்குவதாக அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ எங்களுக்கு உத்தரவிடுங்கள்...” - அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

தமிழக அரசு மூலம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட  நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒன்றிய அரசிடமிருந்து  திட்டங்களைப் பெற்றுநிறைவேற்றிட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அருன் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து லால்குடியில் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி ரவுண்டானாவில் தொடங்கியது. முன்னதாக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, லால்குடி சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரப் பேரணியைத் தொடங்கி வைத்து பேசுகையில், “லால்குடி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நமது பகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நடைபெற்றிருப்பதை நன்கு அறிவீர்கள். மாநில அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்களைக் காட்டிலும் ஒன்றிய அரசிடமிருந்து திட்டங்களைப் பெற்று நமது பகுதியில் நிறைவேற்றிட வேண்டும். இது நமது சொந்தத் தொகுதி என்பதால் அதிகமாகத் திட்டங்களைக் கொண்டு வந்து பணிகளைச் செய்திட உங்கள் ஆதரவு கேட்டு வந்துள்ளோம்.

Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

எங்களுக்கு உத்தரவிடுங்கள், நாங்கள் பணியாற்றத் தயாராக உள்ளோம். லால்குடி நகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம், அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், பொதுமக்கள் வசதிக்கேற்ப புதிய மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் எல்லாம் அடுத்த மாதம்  தொடங்கப்பட உள்ளது. எனவே இப்படிப்பட்ட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றிட உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து அருண் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேரு வாக்காளரிடம் வாக்கு சேகரித்தார்.

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார்.