Skip to main content

அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்.. பரிதாபமாக பலியான கர்ப்பிணி!

Published on 13/01/2023 | Edited on 13/01/2023

 

Pregnant lady passed away in salem court order doctor one core

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள சிந்தாமணியூரைச் சேர்ந்தவர் ஓபுளி திலீப். ஜவுளி வியாபாரி. இவருடைய மனைவியின் பெயர் புவனேஸ்வரி. இருவருக்கும் 2007ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கடந்த 2016ல் புவனேஸ்வரி மீண்டும் கர்ப்பம் தரித்தார். தன் மனைவி மீண்டும் கருவுற்ற நாள் முதல், சேலம் மூணு சாலையில் உள்ள ஆரோக்கியா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவரான ராணியிடம் சிகிச்சைக்கு அழைத்துச் சென்று வந்திருக்கிறார் திலீப். 

 

இதன்பிறகு சில ஆண்டுகளுக்கு முன் தனக்கு நேர்ந்த அனுபவங்களை துயரத்தோடு திலீப் நம்மிடம் விவரித்தார். "என் மனைவிக்கு முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது. ஆனாலும், இரண்டாவது குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க முடியும் என்று மருத்துவர் ராணி நம்பிக்கையூட்டினார். அதனால் சுகப்பிரசவத்துக்குக் காத்திருந்தோம். புவனேஸ்வரியை, 5.11.2016ல் அந்த ஆரோக்கியா மருத்துவமனையில், அவர்கள் சொன்னபடி பிரசவத்திற்காக சேர்த்தேன். பிரசவ வலியை ஏற்படுத்த சில மருந்து, மாத்திரைகளைக் கொடுத்தனர். பிறகு குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, ஒருகட்டத்தில் சிசேரியன் மூலம் குழந்தையை வெளியே எடுத்துவிட்டனர். அப்போது திடீரென்று என் மனைவிக்கு வலிப்பு ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்து விட்டதாகச் சொல்லி, எங்கள் தலையில் இடியை இறக்கினார்கள். எங்களிடம் அனுமதி பெறாமலேயே அருகில் உள்ள நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனைக்கு என் மனைவியை கொண்டு சென்று அங்கும் மூளைச்சாவை உறுதிப்படுத்தினர். பின்னர் மருத்துவர் ராணியும் இறப்பை உறுதி செய்தார். அதனால் உடலைப் பெற்றுக் கொண்டு இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்தோம்.

 

Pregnant lady passed away in salem court order doctor one core

 

இந்நிலையில் என் மனைவி பெயரில் ஏற்கனவே இன்சூரன்ஸ் செய்திருந்ததால், கிளெய்ம் பெறுவதற்காக அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள், இறப்பு அறிக்கை ஆகியவற்றைக் கேட்டு மருத்துவர் ராணியை அணுகினேன். அவர் வழங்க மறுத்துவிட்டார். இதனால் மருத்துவர் ராணி மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பு, இறப்பு, பிரசவத்தின்போது ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு ஆரோக்கியா மருத்துவமனை தரப்பு, அரசுக்கு அளித்த அறிக்கையில், கர்ப்பப்பை வெடித்ததாலும், அதிக ரத்த இழப்பு ஏற்பட்டதாலும் என் மனைவி இறந்து விட்டதாகச் சொல்லியிருப்பதாக எனக்குத் தெரிந்ததும், "என் மனைவியின் மரணம் குறித்தும், சிகிச்சை அளிக்கப்பட்ட முறைகள் குறித்தும்' விசாரிக்கும்படி அரசுக்கு புகார் மனுக்கள் அனுப்பினேன். மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் இரண்டு முறை தனித்தனி குழுவினர் ஆரோக்கியா மருத்துவமனையிலும், மருத்துவர் ராணியிடமும் விசாரணை நடத்தினர்.

 

என் மனைவியின் வயிற்றில் 3.50 கிலோ எடையில் குழந்தை இருந்ததும், அவருக்கு சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பு இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், மயக்கமருந்து நிபுணர் அருகில் இல்லாமல் என் மனைவிக்கு அறுவை சிகிச்சையை ராணி செய்துள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்தது. இத்தனை ரிஸ்க் இருந்தும் மருத்துவர் ராணி அலட்சியமாக சிகிச்சை அளித்ததால்தான் புவனேஸ்வரி இறந்துள்ளதாக சுகாதாரத்துறை அனுப்பிய நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. என் மனைவிக்கு நேர்ந்த கதி இனி வேறு யாருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால்தான் நீதிமன்றத்தின் கதவைத் தட்டினேன்” எனச் சொல்லும் போதே, அவர் விழிகளில் ஈரம் திரண்டது.

 

இதற்கிடையே தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், 6 மாத காலத்திற்கு சிகிச்சை அளிக்கக்கூடாது என்று மருத்துவர் ராணிக்கு கடந்த 10.10.2018ல் தடை விதித்தது. இந்த நிலையில்தான் புவனேஸ்வரியின் மரணத்திற்கு நீதி கேட்டு திலீப், சேலம் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மருத்துவர் ராணி மட்டுமின்றி, அவருடைய கணவர் மருத்துவர் அறிவுக்கரசு, மயக்க மருந்தியல் மருத்துவர் கனியமுது, நியூரோ பவுண்டேஷன் மருத்துவர் நடராஜன் ஆகியோரையும் எதிர் மனுதாரராக அதில் சேர்த்திருந்தார். கடந்த 6 ஆண்டுகளாக வழக்கு நடந்தது.

 

"பிரசவ வலி ஏற்பட்டுள்ளதா என்பதை கவனிக்காமலேயே மேலும் மேலும் அதிகப்படியான மாத்திரைகள், ஊசி மூலம் மருந்துகள் செலுத்தியதால் கர்ப்பப்பை வெடித்து இருக்கிறது. கர்ப்பிணியை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தி குழந்தையை மட்டும் காப்பாற்றி, தாய் இறப்பதற்கு காரணமாக இருந்துள்ளார். மயக்க மருந்து நிபுணர் இல்லாமலேயே அறுவை சிகிச்சை செய்துள்ளார்'' என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

 

நீதிமன்ற விசாரணையின்போது மருத்துவர் ராணி, "எனது கவனமின்மைதான் புவனேஸ்வரியின் இறப்புக்கு காரணம். அவருக்கு இருதய செயலிழப்பு ஏற்பட்டு 30 நிமிடம் கழித்துதான் மயக்க மருந்து நிபுணர் வந்து சேர்ந்தார். கர்ப்பிணியின் பனிக்குடத்தை செயற்கையாக உடைத்துவிடும் மருந்தை புவனேஸ்வரிக்கு கொடுத்ததும் உண்மைதான்'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

 

கடந்த 22ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், "சிகிச்சையின்போது அலட்சியமாக செயல்பட்டு கர்ப்பிணியின் மரணத்துக்கு காரணமாக அமைந்ததால் மருத்துவர் ராணி, மனுதாரருக்கு ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும்' என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மற்ற மூவர் மீதான குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

இதுபோன்ற தகுதியற்ற கொலைகார மருத்துவர்களிடம் இருந்து மக்களைக் காப்பாற்ற அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.