Skip to main content

பகலில் சாமியார்; இரவில் திருடன்! சேலத்தில் பலே ஆசாமி கைது!

Published on 11/07/2022 | Edited on 11/07/2022

 

preacher by day; Thief in the night! Bale Asami arrested in Salem!

சேலத்தில், பகல் நேரத்தில் காவி உடையில் சாமியார் வேடமிட்டு வீடுகளை நோட்டமிட்டு வரும் வாலிபர், இரவு நேரங்களில் வீடுகளில் திருட்டை அரங்கேற்றி வந்திருக்கும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

சேலத்தை அடுத்துள்ள மின்னாம்பள்ளியைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 62). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவருடைய மனைவி ராஜாமணி. கணவன், மனைவி இருவரும் ஜூலை 2- ஆம் தேதி காலை, தங்கள் வீட்டை பூட்டி விட்டு, பழனி முருகன் கோயிலுக்கு சென்று விட்டனர். 

 

கோயிலில் இருந்து மறுநாள் அதிகாலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பதற்றம் அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோக்களில் வைக்கப்பட்டு இருந்த 40 பவுன் நகைகள், 80 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டது தெரிய வந்தது. இதைக்கண்டு தம்பதியர் அதிர்ச்சி அடைந்தனர். 

 

இதுகுறித்து சின்னசாமி காரிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் (பொறுப்பு) உமாசங்கர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார். நிகழ்விடத்தில் பதிவாகி இருந்த விரல்ரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் உதவியுடன் திருடர்களை தேடி வந்தனர். 

 

இதற்கென தனிப்படை அமைத்து மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டார். சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தியுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். தீவிர விசாரணையில், சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 33), பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த அமீர்ஜான் (வயது 34), செல்வராஜ் என்கிற சாகுல் ஹமீத் (வயது 53) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. 

preacher by day; Thief in the night! Bale Asami arrested in Salem!

இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகள், 80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்டுள்ள மூவரில் ஒருவரான மணிகண்டன் என்பவர்தான் இந்த சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டு வந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

 

இவர் மீது ஏற்கனவே சேலம் மாநகர காவல்துறையில் 2 கொலை வழக்கு, ஒரு கொலை முயற்சி, ஆள் கடத்தல், கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. நாமக்கல், ஈரோடு, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் மணிகண்டன் மீது திருட்டு வழக்குகள் உள்ளிட்ட 30 வழக்குகள் விசாரணையில் உள்ளன. மணிகண்டனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்களும் கிடைத்தன. 

 

மணிகண்டனை குற்ற வழக்குகள் தொடர்பாக பல்வேறு மாவட்ட காவல்துறையினர் நீண்ட காலமாக வலைவீசி தேடி வருகின்றனர். அவர்களுக்கு போக்குக் காட்டுவதற்காக பகல் நேரங்களில் காவி வேட்டி அணிந்து கொண்டும், கழுத்தில் நான்கைந்து ருத்ராட்ச மாலைகள், நெற்றியில் பட்டையாக விபூதி, திருநீறு அணிந்து கொண்டும், கையில் பல்வேறு நிறங்களில் மந்திரித்த கயிறுகளைக் கொண்டும் சாமியார் வேடமிட்டு சுற்றி வந்திருப்பது தெரிய வந்தது. தனக்கு பணத்தேவை ஏற்படும்போது, இரவு நேரங்களில் வீடுகளில் திருடி வந்துள்ளார்.

 

சேலத்தை அடுத்த அயோத்தியாபட்டணத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததும், அங்கு தனது காதலியை வரவழைத்து  அவருடன் நெருக்கமாக இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. சாமியார் வேடம் போட்டிருந்ததால், அவர் மீது யாருக்கும் எளிதில் சந்தேகம் வராததோடு, நல்ல அபிமானத்தையும் கொடுத்துள்ளது. அதேநேரம், எந்தெந்த வீடுகள் நீண்ட நாள்களாக பூட்டிக் கிடக்கிறது?, வயதானவர்கள் வசிக்கும் வீடுகள் குறித்தெல்லாம் நோட்டமிட்டு வரவும் சாமியார் வேடம் பெரிதும் உதவியிருக்கிறது. 

 

நீண்ட நாள்களாக பூட்டி இருக்கும் வீடுகள், முதியோர் வசிக்கும் வீடுகளாக பார்த்து அவர் தனது கூட்டாளிகளுடன் இரவு நேரத்தில் சென்று திருடி வந்துள்ளார். திருடிய பணம், நகைகளைக் கொண்டு அவர் பெண்களுடன் தனிமையில்  இருந்துள்ளார். பிடிபட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிக்கரணை ஆணவக்கொலை சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி; உயிரை மாய்த்த காதலி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமண எதிர்ப்பால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொலையான இளைஞனின் காதல் மனைவியும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இங்குள்ள ஜல்லடையான்பேட்டை ஷர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது.

காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

nn

இதனையடுத்து, மேலும் அதிர்ச்சி தரும் விதமாக பிரவீனின் காதல் மனைவி ஷர்மிளாவும் உயிரிழந்துள்ளார். காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டுள்ளார்.

ஆணவக் கொலை செய்யப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் காதலியும் தற்கொலை செய்துகொண்டது அங்கு பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.