பிரகாஷ்ராஜ் குறித்து வாய்திறந்த பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்; முடிவெடுத்த போலீசார்

NN

திருச்சியைத் தலைமை இடமாகக் கொண்டு சென்னை, ஈரோடு, நாகர்கோவில், மதுரை, கும்பகோணம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 7 இடங்களில் பிரணவ் ஜுவல்லரி கடை செயல்பட்டு வந்தது. நகை விற்பனையுடன் செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என நிர்வாகம் கொடுத்த விளம்பரத்தைப் பார்த்த பலரும் லட்சங்களில் முதலீடு செய்தனர். 5 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 2 சதவீத வட்டி வீதம் என மாதம் தோறும் 10000 ரூபாய், பத்து மாத முடிவில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்கம் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என்ற கவர்ச்சி அறிவிப்பை நம்பி பலரும் 5 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருந்தனர்.

இந்த சூழலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட காசோலைகள் பணமில்லாத காரணத்தால் திரும்பி வந்துள்ளன. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஓரிரு வாரங்களில் பணம் செட்டில் செய்வதாக ஜூவல்லரி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும் உரிய பணம் சென்று சேராததால், முதலீடு செய்தவர்கள் மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து மோசடி புகாரில் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ், அவரது மனைவி கார்த்திகா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இருவரையும் தேடி வந்தனர். தொடர்ந்து நகை சேமிப்பு மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ், மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அதேபோல் நேற்று மதன் செல்வராஜின் மனைவி கார்த்திகா கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கடையின் விளம்பர படத்தில் நடித்த பிரகாஷ்ராஜுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்தநிலையில் பிரணவ் ஜூவல்லரி மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பில்லை என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தற்பொழுது தெரிவித்துள்ளனர். கடையின் உரிமையாளர் மதனை காவலில் எடுத்து விசாரித்துவரும் நிலையில், மதனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மோசடியில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பு இல்லை என அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் பிரகாஷ்ராஜ் விளம்பரத்தில் மட்டும் நடித்ததாகவும், நிறுவனத்தில் எந்த முதலீடும்செய்யவில்லை எனவும் தெரியவந்துள்ளது. மோசடியில் தொடர்பில்லாததால், பிரகாஷ்ராஜிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாகபொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

jewelery police Prakashraj thiruchy
இதையும் படியுங்கள்
Subscribe