ADVERTISEMENT

மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் எம் சுவாமி விரைவில் கைது? - முன்ஜாமின் மனு தள்ளுபடி! 

02:51 PM Jul 11, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் எம்.சுவாமி மீது காயத்ரி சாய் என்கிற பெண்மணி கொடுத்த புகாரின்பேரில் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாடு மகளிர் வன்புணர்வுத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது இராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸ். இந்த, வழக்கில் முன்ஜாமீன் கேட்டு பிரகாஷ் எம் சுவாமி தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டதால் விரைவில் கைதுசெய்யப்படுவார் என்கிறது கோர்ட் வட்டாரம்.

ADVERTISEMENT


சென்னை கோபாலபுரத்தில் வசித்துவரும் காயத்ரி சாய் என்கிற பெண்மணி, முதலில் முகநூல் லைவ் வீடியோ மூலம் பத்திரிகையாளர் பிரகாஷ் எம். சுவாமி மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். 2018 செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், "எனது கணவரின் மறைவுக்குப் பிறகு, எனது மகனுக்கு பாஸ்போர்ட் வாங்கித் தருவதில் உதவிகரமாக இருப்பதாகக் கூறி பிரகாஷ் எம். சுவாமி என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார்" என்று கூறியிருந்ததோடு அதுகுறித்து காவல்துறையில் புகாரும் கொடுத்திருந்தார்.



2019 மே 27 தேதியிட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, ஜூலை மாதம் 2018 மாலையில், காயத்ரியின் மகனுக்கு பாஸ்போர்ட் தொடர்பாக உதவுவதாகக் கூறிக்கொண்டு அவரது வீட்டிற்கு பிரகாஷ் எம். சுவாமி சென்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி காயத்ரி கூறுகையில், “அவர் என் அருகில் அமர்ந்து ( பிரகாஷ் எம்.சுவாமி நடந்துகொண்ட விதம் குறித்து காய்த்ரி சாய் எஃப்.ஐ.ஆரில் வேதனையுடன் குறிப்பிட்டிருப்பது மிகவும் பாலியல் வன்முறையாக உள்ளது) என் தோள்மீது கையை போட்டுக் கொண்டு தவறாக நடந்துகொள்ள ஆரம்பித்தார். நான், பயத்தில் அலறித்துடித்ததும் வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து என்னை அவரது பிடியிலிருந்து காப்பாற்றினார்கள். நான், அவரை என் தந்தை ஸ்தானத்தில் தான் பார்த்தேன்” என்கிறார்.


பிரகாஷ் எம். சுவாமி பல ஆண்டுகளாக இதுபோல் பல பெண்களிடம் தவறாக நடந்து வந்துள்ளார். அவர்கள், இதை வெளியில் சொல்லக் கூடாது என்பதற்காக மிகப்பெரிய தலைவர்களுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைக் காட்டி மிரட்டி இருக்கிறார் என்றும் குற்றம்சாட்டுகிறார் காயத்ரி.


இந்த, சம்பவத்திற்குப் பிறகு தொலைபேசி மற்றும் இணையதளம் வாயிலாக தரக்குறைவான குறுஞ்செய்திகளை அனுப்பிய பிரகாஷ் எம். சுவாமி தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டார் என காயத்ரி தனது முகநூல் பதிவுகளில் குமுறியிருக்கிறார்.

மேலும், மாரடைப்பால் இறந்துபோன தனது கணவரை, நானே கொன்றுவிட்டதாக பிரகாஷ் எம். சுவாமி தவறாக பரப்பி விட்டார். இதையடுத்து எட்டு மாதங்கள் கழித்து சென்னை இராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்ததைத் தொடர்ந்து பிரகாஷ் எம். சுவாமி முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

பாதிக்கப்பட்ட காயத்ரியும் முன்ஜாமீன் வழங்க கூடாது என மனுத்தாக்கல் செய்தார். அந்த இரண்டு மனுக்கள் மீதும் கடந்த ஒரு மாதமாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நீதியரசர் இளந்திரையன் இன்று(2019 ஜூலை- 11 ந்தேதி) பிரகாஷ் எம் சுவாமியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து பத்திரிக்கையாளர் பிரகாஷ் எம் சுவாமி விரைவில் கைது செய்யப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT