Skip to main content

ஆதரவற்றோருக்கு அடைக்கலம் அளிக்கும் இளம்பெண்; குவியும் பாராட்டுகள்

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

Praise young woman who admitted the destitute and mentally challenged  shelter

 

தஞ்சை மாவட்டம் பேராவூரணி சுற்றுவட்டாரக் கிராமங்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர் மற்றும் மனநலன் பாதிக்கப்பட்டோரை மீட்டு காப்பகத்தில் சேர்த்து வருகிறார் இளம்பெண் ஒருவர்.

 

பெற்ற பிள்ளைகளால் துரத்தப்பட்ட பல முதியவர்கள் மனநலன் பாதிக்கப்பட்டு தாங்கள் என்ன செய்கிறோம் என்று கூட அறியாது, சாலைகளில் பசியும் பட்டினியுமாக, கிழிந்த அழுக்கடைந்த ஆடைகளோடும், வாரப்படாத தலைமுடிகளோடும் சுற்றித் திரிகின்றனர். இவர்களுக்கு தங்கள் சொந்த ஊர் எது, தாங்கள் யார், தங்கள் உறவினர் யார் என்று தெரியாத அவலம் நிலவுகிறது. மனநலன் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் பலர் வக்கிரபுத்தி கொண்ட சிலரால் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு தாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம் என்று கூட தெரியாமல் அலைந்து திரியும் கொடூரம் நம் கண் முன்னே சாதாரணமாக நிகழ்கிறது.

 

இந்நிலையில், பேராவூரணி அரசு மருத்துவமனை சாலையில் வாடகை வீட்டில் குடியிருந்து வரும் சாதாரண தையல் தொழிலாளியான இளம்பெண் ஜெயலெட்சுமி, பேராவூரணி பகுதியில் சுற்றித்திரிந்த ஆதரவற்றோர், மனநலன் பாதிக்கப்பட்டோரை மீட்டு அரசு மனநல மருத்துவமனை, ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்க்கும் அறப்பணியை எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்து வருகிறார்.

 

Praise young woman who admitted the destitute and mentally challenged  shelter

 

கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி தொடங்கி இதுவரை 2 மாதகாலத்திற்குள் 25க்கும் அதிகமான ஆதரவற்றோரை முதியோர் இல்லத்திலும், 5 பேரை அரசு மனநல மருத்துவமனையிலும் சேர்த்துள்ளார். இவரது சேவைப்பணிக்கு பொதுமக்கள், கடைவீதி வியாபாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து ஜெயலட்சுமி நம்மிடம், “சாதாரண தையல் தொழிலாளியாக வாழ்க்கையை நடத்தி வருகிறேன். சாலையோர ஆதரவற்றோரை மீட்டெடுக்கும் "ஆபரேஷன் புதுவாழ்வு" என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், நீலகண்ட பிள்ளையார் ஆலயம் என பல இடங்களில் ஆதரவற்ற நிலையில் இருந்தவர்களை பேராவூரணி வட்டாட்சியர் சுகுமார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், காவல்துறை ஆய்வாளர், அறநிலையத்துறை அதிகாரிகள், மகாசக்தி அறக்கட்டளை, துளிர் அமைப்பு, ஆலமரத்து விழுதுகள் அமைப்பு மற்றும் தன்னார்வலர்கள் ஒத்துழைப்புடன் மீட்டு 19 பேரை அருகே உள்ள நமது இல்லம் ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்துள்ளோம். தொடர்ந்து டிசம்பர் 7 ஆம் தேதி ஆறு பேரை காப்பகத்தில் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளோம். மேலும், மனநலன் பாதிக்கப்பட்ட சிலரை கொண்டுபோய் தஞ்சை மருத்துவமனையில் சேர்த்து வந்தேன். ஆனால், அங்கு முறையாக சிகிச்சை அளிக்காமல் வெளியே அனுப்பி விடுகின்றனர். 

 

Praise young woman who admitted the destitute and mentally challenged  shelter

 

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கடலுக்குள் குதித்த பட்டுக்கோட்டை பகுதி முதியவர் ஒருவரை மீட்டு காவல்துறை ஒத்துழைப்புடன் அவரது குடும்பத்தில் ஒப்படைத்தேன். குருவிக்கரம்பை பகுதியைச் சேர்ந்த மனநலன் பாதிக்கப்பட்ட ஒருவரை தஞ்சை மருத்துவமனையில் சேர்த்தேன். ஆனால், அவருக்கு முறையாக சிகிச்சை அளிக்காமல் வெளியே அனுப்பிவிட்டனர். தற்போது மீண்டும் மனபாதிப்பில் கடைத்தெருவில் சுற்றித்திரிகிறார். இப்படியானவர்களை சரியாக பராமரிக்க வேண்டும். தனிநபராக பாதிக்கப்பட்டவர்களை மீட்டு காப்பகத்திற்கோ, அரசு மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதில் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறேன். தன்னார்வலர்கள் உதவியாலும், என்னுடைய சொந்த பணத்தைக் கொண்டும், ஆம்புலன்ஸ் மூலம் காப்பகம், மருத்துவமனைக்கு கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. பேராவூரணி சீனிவாசா ஆம்புலன்ஸ் நிறுவனத்தினர் எரிபொருள் கட்டணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு உதவினர்.

 

பெரும்பாலானோர் குடும்பத்தினர் தொல்லை தாங்காமலேயே வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். சிலர் சொத்தை பிடுங்கிக் கொண்டு வெளியே அனுப்பி விடுகின்றனர். ஒரு சிலர் முதியோர் ஓய்வூதியத் தொகை வாங்கும் தினத்தன்று அழைத்துச் சென்று அந்த பணத்தை கைப்பற்றிக் கொண்டு பெற்றோரை திருப்பி அனுப்பி விடுகின்றனர். அதேபோல், பிள்ளைகள் சிலர் பிச்சை எடுக்க சொல்லி அந்த காசை வசூல் செய்வதும் கண்கூடாக தெரிகிறது. சிலர் தாங்கள் யார் என்றே தெரியாத நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு திரிகின்றனர். இவர்களை எல்லாம் தனி ஒரு நபராக மீட்டெடுப்பதற்கு ஒரு பெண்ணாக பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. அரசும் தொண்டு நிறுவனங்களும் உதவினால் ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முடியும்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.