Skip to main content

கஜா புயல் பேரழிவில் இருந்து மக்கள் மீளவில்லை அரசு மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை... பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

Published on 22/01/2019 | Edited on 22/01/2019
pr pandian


 

கஜா புயலால் பெரும் பாதிப்புக்கு உள்ளான புஷ்பவனம் இன்னும் இயல்புநிலைக்கு வரவில்லை. இதற்கிடையில் அந்த பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முடிவு செய்திருக்கிறது மத்திய அரசு.
 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் இரண்டாவது அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. அதற்கு கடுமையான எதிர்ப்பு மக்களிடமும் அரசியல் கட்சிகளிடமும்,விவசாயிகளிடமும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் வரும்  ஜனவரி 26  குடியரசு தினத்தன்று திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில்  மாபெரும்  உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த இருக்கிறார்கள் விவசாய சங்கத்தினர்.  அதோடு  டெல்டா மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றவும் தயாராக உள்ளனர்.
 

இந்த சூழலில் ஹைட்ரோகார்பன் குறித்தான விழிப்புணர்வு பிரச்சாரத்தை அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் பி.ஆர். பாண்டியன் விவசாயிகளோடு பயணத்தை மேற்கொண்டு வருகிறார். வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம்  கடற்கரை கிராமத்திற்கு சென்றவர் செய்தியாளர்களிடம் பேசினார். "திருக்காரவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் கடலூர் முதல் கோடியக்காடு வரை கடல் பகுதி முழுவதும் பேரழிவு  ஏற்பட உள்ளது. மீன் பிடி உரிமை பறிபோகும், வாழ்வாதாரம் அழியும் என்றும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்து மீனவர்களும் விவசாயிகளோடு இணைந்து போராட வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளேன். 
 

கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் அந்த துயரில் இருந்து மீளவில்லை. சுமார் 70 நாட்களுக்கு மேலாகியும் மீன் பிடிக்க செல்லவில்லை. வருவாய் இழந்து முடங்கி கிடக்கின்றனர். மிகுந்த மீளாத்  துயரத்தில் உள்ளனர். கடல் சேற்றால், படகுகள் புதையுண்டு கிடக்கிறது. இது வரையில் மறுசீரமைப்பு பணிகள் துவங்கவேயில்லை. 10க்கும் மேற்பட்ட மண் அகற்றும் இயந்திரங்கள் நிறுத்திய நிலையில் உள்ளது. முதலமைச்சர் உடன் தலையிட்டு அவசரக்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்." என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“விவசாயிகளின் கோரிக்கை எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை” - ஜார்க்கண்ட் ஆளுநர் 

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
 Jharkhand Governor c.p.radhakrishnan says I don't know how feasible the farmers' demand is

தலைநகர் டெல்லியை நோக்கி,  12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி,  பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பேரணியாகச் செல்கின்றனர். விவசாயிகளுக்கும் ஹரியானா மாநில காவல்துறையினருக்கும் இடையே பஞ்சாப், ஹரியானா எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நீடித்துவருகிறது.பஞ்சாப் ஹரியானா எல்லையான ஷாம்பு எல்லைப் பகுதியில், ஏற்கனவே விவசாயிகள் மீது தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி வருகின்றனர்.

காவல்துறையினரால் வீசப்பட்ட கண்ணீர் புகைக் குண்டு வெடித்து,  பஞ்சாப் மாநிலம் பதிண்டாவைச் சேர்ந்த சுப்கரன் சிங் (வயது 24) என்னும் இளம் விவசாயி கடந்த 21ஆம் தேதி உயிரிழந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.இராதாகிருஷ்ணன் இன்று (23-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பஞ்சாப்பில் இருந்து விவசாயிகளின் போராட்டம் அடிக்கடி நடக்கிறது. ஏன் என்று எங்களுக்குப் புரியவில்லை. குறைந்தபட்ச விலையை எப்படி சட்டப்படி உறுதி செய்வது என்று தெரியவில்லை. அவர்களின் கோரிக்கை எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. நீங்கள் அதிக எண்ணிக்கையில் வந்து போக்குவரத்தைத் தடுக்குறீர்கள். பிறகு, அரசு சில நடவடிக்கை எடுக்கத் தான் வேண்டும்” என்று கூறினார். 

Next Story

“விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது தான் உங்களின் ஜனநாயகமா?”  - ராகுல் காந்தி காட்டம்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Rahul Gandhi  questioned suppressing every voice of truth is your democracy

தலைநகர் டெல்லியை நோக்கி, 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பேரணியாகச் செல்கின்றனர். விவசாயிகளுக்கும் ஹரியானா மாநில காவல்துறையினருக்கும் இடையே பஞ்சாப், ஹரியானா எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நீடித்துவருகிறது.பஞ்சாப் ஹரியானா எல்லையான ஷாம்பு எல்லைப் பகுதியில், ஏற்கெனவே விவசாயிகள் மீது தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி வருகின்றனர்.

இதனிடையே, போராட்டத்தில் உள்ள விவசாயிகள் மீது போலீசார் நடத்தும் கண்ணீர்புகை குண்டு வீசும் வீடியோக்களை விவசாயிகள் பலர் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அரசின் உத்தரவின் பேரில் சில கணக்குகள் மற்றும் பதிவுகள் நீக்கப்பட்டதாக எக்ஸ் (ட்விட்டர்) இன்று (22-02-24) தெரிவித்துள்ளது. 

இது குறித்து, எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனத்தின் உலக அரசுகள் விவகார பிரிவு வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, ‘இந்திய அரசின் உத்தரவுகளுக்கு இணங்க, குறிப்பிட்ட கணக்குகள் மற்றும் பதிவுகளை இந்தியாவில் மட்டும் நிறுத்தி வைப்போம். இந்த நடவடிக்கையை எடுத்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மேலும், கருத்துச் சுதந்திரம் என்பது இந்த பதிவுகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது. 

எக்ஸ் நிறுவனம் பதிவை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது பதிவில் மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டால் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறீர்கள். இளைஞர்களின் வேலைவாய்ப்பு கேட்டால் அவர்களின் பேச்சை கேட்பதை கிடையாது. முன்னாள் ஆளுநர் உண்மையைக் கூறினால் அவர் வீட்டுக்கு சி.பி.ஐயை அனுப்புகிறீர்கள். 

மிக முக்கிய எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்கை முடக்குகிறீர்கள். 144 தடை, இணையத்தடை, விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு, ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உண்மைக் குரல்களை நசுக்குவது தான் உங்களின் ஜனநாயகமா?. மோடி அவர்களே, நீங்கள் ஜனநாயகத்தை கொன்றுவிட்டீர்கள் என்பது பொதுமக்களுக்கு தெரியும். அவர்கள் அதற்கு பதில் அளிப்பார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.