Skip to main content

நடந்து சென்ற நபர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Pour petrol on a person walking and set him on fire in dindugal

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவர், நேற்று (31-12-23) இரவு திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 பேர், தாங்கள் ஏற்கனவே கையில் கொண்டு வந்த பெட்ரோலை சதீஷ் மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். எதிர்பாராத விதமாக நடைபெற்ற சம்பவத்தால் எரிந்த நிலையில் தடுமாறி கீழே விழுந்த சதீஷ் உடல் முழுவதும் எரிந்தது. இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் சதீஷை உடனடியாக சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் உள்ள சதீஷ் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், சதீஷ் மீது தீ வைத்து எரித்த அந்த மர்ம நபர்கள் யார்? எதற்காக தீ வைத்தனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து வரும் நிலையில், திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.                                               

சார்ந்த செய்திகள்