Skip to main content

தமிழகத்தில் பேரணி ரத்து - ஆர்.எஸ்.எஸ்

Published on 05/11/2022 | Edited on 05/11/2022

 

Postponement of RSS rally in Tamil Nadu

 

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 44 இடங்களில்  பேரணி நடத்த அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

இது குறித்தான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி அளித்துள்ளது. கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம், அருமனையில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. 6 இடங்கள் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 3 இடங்கள் உள்ளிட்ட 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணியை நடத்தலாம் எனத் தீர்ப்பளித்துள்ளது. அனுமதி மறுக்கப்பட்ட ஆறு இடங்களில் இயல்பு நிலை திரும்பும் வரை ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு காத்திருக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 

 

மேலும், பேரணி நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் போது பாடல்கள் பாடவோ, தனிப்பட்ட நபர்கள், மதம், ஜாதி குறித்து தவறாகப் பேசவோ கூடாது. தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் குறித்துப் பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூடாது என உத்தரவிட்ட நீதிபதி, இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படக் கூடாது. லத்தி, கம்பு போன்ற ஆயுதங்கள் எடுத்துச் செல்லக் கூடாது என்றும் பல்வேறு வகையான உத்தரவுகளை விதித்துள்ளார்.

 

மேலும், பேரணியில் கலந்து கொள்பவர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, முதலுதவி, ஆம்புலன்ஸ், கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளை நிகழ்ச்சி ஏற்பாடு செய்து நடத்துபவர்கள் செய்து தர வேண்டும்.  பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் அதற்கான இழப்பீட்டை செலுத்த உத்தரவாதம் அளிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட உத்தரவுகளை மீறும் பட்சத்தில் காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதி நிபந்தனை உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

 

இந்நிலையில், நாளை தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உயர்நீதிமன்றம் நிபந்தனை உடன் அனுமதி வழங்கியிருந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் நிபந்தனை உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். இதனால் நாளை நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.