Possibility of a storm forming in the Bay of Bengal Meteorological Dept informs

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாகக் கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், ‘தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.

Advertisment

இது வட கிழக்கு திசையில் நகர்ந்து வரும் 24 ஆம் தேதி (நாளை) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதாவது இந்தக்காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடகிழக்கு நோக்கி நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கிச் செல்லும். அதே சமயம் இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழ்நாட்டை நோக்கி வராது என்றாலும் தமிழகத்தில்மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த அறிவிப்பில் இந்த ஆண்டின் முதல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இதுவாகும். இதனால் தமிழ்நாட்டில் மிகக்கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (23.05.2024) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வங்கக்கடலில் நிலவி இருந்த குறைந்த தாழ்வுப்பகுதி இன்று காலை 08.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை (24.05.2024) மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். மேலும் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் (25.05.2024) வங்கக்கடலில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்தப் புயல் வடக்கு திசையில் நகர்ந்து 26 ஆம் தேதி மாலையில் வங்கத் தேசம் அருகே தீவிர புயலாக வலுப்பெறும் எனக் கணிக்கப்பட்டிருப்பதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.