தென்னகத்தில் அதிகமான தொல்லியல் எச்சங்கள்கண்டறியப்பட்டது புதுக்கோட்டை மாவட்டத்தில் தான். எந்த ஊரில் பார்த்தாலும் ஏதாவது ஒரு வரலாற்றுச் சான்று கண்டறியப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த நிலையில் புதுக்கோட்டை அருகே உள்ள சங்க காலத்தைச் சேர்ந்ததமிழர்களின் தொன்மைச்சின்னமாகக் கருதப்படும் பொற்பனைக்கோட்டையை, தொல்லியல் அகழாய்வு செய்ய வேண்டுமெனக் கடந்த 2019-ஆம் ஆண்டு, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவர் கீழப்பனையூர் கரு.ராஜேந்திரன், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார். வழக்கை மூத்த வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் நடத்தினார். இந்த நிலையில் பொற்பனைக்கோட்டைக்கு வந்து பலமுறை மேலாய்வு செய்த சென்னை திறந்தநிலை பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அகழாய்வு செய்தால், தமிழர்களின் நாகரீக வரலாறு கண்டறியப்படலாம் என்று இந்தியத் தொல்லியல் துறையிடம் அகழாய்வு செய்ய அனுமதி கேட்கப்பட்டது.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வுஇன்று (21.12.2020), இதுகுறித்து வருகின்ற ஜனவரி 31-ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் ஏற்கனவே பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சார்பாகக் கள மேலாய்வு மேற்கொண்டு அங்கு அகழ்வாய்வு மேற்கொள்ள மத்தியஅரசுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், தமிழக அரசும் அதனை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமே இந்த ஆய்வைமேற்கொள்வது குறித்தும் முடிவெடுக்க மத்திய தொல்லியல் துறைக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவுப்படி பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு செய்தால், தமிழர்களின் தொன்மை வரலாறுகள் வெளிக் கொண்டுவரப்படும்.