காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொளக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் அபூபக்கர் மகன் பையாஸ் அகமது. இவர் கடலூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்டச் செயலாளராக உள்ளார். இன்று நள்ளிரவு ஒரு மணி அளவில் அவரது வீட்டுக்கு வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டவர்கள் அவரது வீட்டை சோதனை செய்து அவர் பயன்படுத்திய மடிக்கணினி மற்றும் இரண்டு தொலைபேசிகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்து அழைத்துச் சென்று சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விடிய விடிய விசாரணை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து அவர் இன்று காலை மீண்டும் விசாரணை நடத்த கடலூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனை அறிந்த பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் சிதம்பரம் - காட்டுமன்னார்கோவில் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பயாஸ் அகமது வீடு இருக்கும் பகுதியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பேரிகாடு அமைத்து யாரையும் உள்ளே விடாமல் அந்த பகுதி முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தி 100-க்கும் மேற்பட்டோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.