
பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.
புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மீது ஆள்கடத்தல் வழக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து முன்ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று (16.06.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வேல்முருகன், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஏ.டி.ஜி.பி. ஜெயராமனும், பூவை ஜெகன்மூர்த்தியும் பிற்பகல் 02:30 மணி அளவில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அப்போது பூவை ஜெகன்மூர்த்தி ஆஜராகுவதற்குக் கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை எற்றுகொண்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணையைச் சிறிது நேரத்திற்கு ஒத்தி வைத்தார். இந்நிலையில் பூவை ஜெகன்மூர்த்தி ஏ.டி.ஜி.பி. ஜெயராமனும் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து முன் ஜாமீன் மீதான விசாரணையானது தொடங்கி நடைபெற்று வருகிறது.முன்னதாக காலையில் நடைபெற்ற விசாரணையின் போது இரு தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டது. அப்போது, கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்திருந்தார்.