Skip to main content

நீதிபதிகளின் உத்தரவுக்கு நன்றி தெரிவித்த ஏழை நரிக்குறவர் குடும்பத்தினர்!

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

Poor family thanks for judge's order

 

உளுந்தூர்பேட்டை நகரில் உள்ளது நரிக்குறவர் காலனி. இங்கு வசித்துவந்தவர் 65 வயது சவுரியன். இவர் பாசி மணி, ஊசி மணி விற்பதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி உளுந்தூர்பேட்டை மேம்பாலம் அருகே ஓரமாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்தவர் சவுரியன் மீது மோதியுள்ளார். இதில் சவுரியன் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் சவுரியன் இறப்பிற்கு நஷ்டஈடு கேட்டு கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடத்திவந்துள்ளனர்.

 

இந்த வழக்கு கடலூர் நீதிமன்ற முதன்மை நீதிபதி ஜவஹர் தலைமையில் நேற்று (12.09.2021) நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி புவனேஸ்வரி, கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி செந்தில்குமார், தொழிலாளர் நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுபா அன்புமணி, மகிளா நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன், போக்சோ நீதிமன்ற நீதிபதி எழிலரசி, எஸ்சி/எஸ்டி நீதிமன்ற நீதிபதி உத்தமராஜ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரபாகர், சிறப்பு சார்பு நீதிபதி இருதயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாக்கியம் வரவேற்றார். இதில் வக்கீல் சங்கத்தலைவர் சுந்தரமூர்த்தி, செயலாளர் சம்பத்குமார், லாயர் அசோசியேஷன் தலைவர் சிவராஜ், மூத்த வழக்கறிஞர் அருளப்பன் சித்ரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

இந்த வழக்கில் இறந்த சவுரியன் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக 7 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்குமாறு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. அதற்கான தீர்ப்பு உத்தரவினை மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சிவமணி, வழக்கறிஞர்கள் சரவணன், முகுந்தன், சத்யா முகுந்தன் ஆகியோர் முன்னிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நரிக்குறவ இன குடும்பத்தினர், விபத்து நடந்த ஒரு ஆண்டில் இழப்பீடு தொகை கிடைத்தது மிகப்பெரும் உதவியாக உள்ளதாக கூறி நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்தனர்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.