Police

சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த கார் டிரைவர், தரணிதரன். இவருக்கு பவானி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். கணவர் தரணிதரன் கடந்த 22ஆம் தேதி கடன் தொல்லைக் காரணமாக தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டதாக பவானி பூந்தமல்லி போலீசார் புகார் செய்தார்.

Advertisment

இந்தப் புகாரையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், தரணிதரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தரணிதரன், கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

Advertisment

இதையடுத்து போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். இதனால் பவானி மீது சந்தேகம் அடைந்த போலீசார், பவானியிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பவானி முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறினார். பவானியின் செல்போன் அழைப்புகளைச் சோதனை செய்தபோது, அதில் ஒரு நபர் மட்டும் அடிக்கடி பேசி இருப்பதும், தரணிதரன் இறப்பதற்கு முன்பு அந்த நபர் பவானி வீட்டுக்கு வந்து சென்றதும் தெரியவந்தது.

பவானியிடம் தீவிரமாக விசாரித்தபோது, தரணிதரனின் நண்பரான தினேசும் டிரைவராக உள்ளார். இருவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவார்கள். நாளடைவில் தரணிதரன் வீட்டிற்கு தினேஷ் வந்து செல்லும் அளவுக்கு நட்பு நீடித்தது. தினேஷ் ஏற்கனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்ததால், பவானி மீது கண் வைத்துள்ளார் தினேஷ். இதனால் தரணிதரன் வீட்டுக்கு தினேஷ் அடிக்கடி வந்து செல்வார். அப்போது தினேசுக்கும், பவானிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின்னர் முறை தவறிய உறவாக மலர்ந்துள்ளது.

Advertisment

தங்களது சந்திப்புகளுக்கு தரணிதரன் இடையூறாக இருப்பதாக பவானியும், தினேஷும், அவரைக் கொலை செய்யத்திட்டமிட்டுள்ளனர். பூச்சி மருந்தை உணவில் கலந்து கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி தரணிதரனுக்குசாப்பாட்டில் பூச்சி மருந்தைக் கலந்து கொடுத்துள்ளார், பவானி. வழக்கம்போல உணவு அருந்திவிட்டு தூங்கிய தரணிதரன், மறுநாள் காலையில் எழுந்து வாந்தி எடுத்துவிட்டு, காஃபி குடித்துவிட்டு மீண்டும் தூங்கியுள்ளார்.

உணவில் விஷம் கலந்து கொடுத்தும் தரணிதரன் சாகவில்லை என்றதும் ஆத்திரம் அடைந்த பவானி, காதலன் தினேசை போனில் தொடர்புகொண்டு, விஷம் கொடுத்தும் புருஷன் சாகல, எப்போதும் போலத்தான் இருக்கிறார். உடனே நீங்கள் வாருங்கள் என அழைத்துள்ளார். காதலன் வருவதற்குள் குழந்தைகளை தாத்தா வீட்டிற்கு அனுப்பி வைத்த பவானி, காதலன் வந்ததும், காதலனுடன் சேர்ந்து கணவரைத் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

படுத்துக்கிடந்த தரணிதரனின் கழுத்தைத் துப்பட்டாவால் நெரித்துக் கொலை செய்தார். தரணிதரன் துடிதுடித்துப் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரே தற்கொலை செய்து கொண்டதுபோல் துப்பட்டாவின் இரண்டு பகுதிகளையும் தரணிதரன் கையில் சுற்றிவிட்டு தினேஷ் அங்கிருந்து சென்றுவிட்டார்.

பின்னர் கொலையை மறைப்பதற்காக கடன் தொல்லையால் தனது கணவர் தனக்குத்தானே துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்துகொண்டது போல் பவானி நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.

கைதான இருவரும் போலீசார் முன்னிலையில் தரணிதரனை கொலை செய்தது எப்படி? என நடித்துக் காட்டினார்கள். அதனை போலீசார் வீடியோ பதிவு செய்தனர்.