கடலூர் மாவட்டம், கிள்ளையில் திமுக சார்பில் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்து மரியாதை செய்யப்பட்ட சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அருகே உள்ள, கிள்ளை பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் 36 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் கரோனா தொற்று நேரத்தில் உயிரை பற்றி கவலைபடாமல், கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணிகளை சிறப்பாக செய்துள்ளனர். இதனால் இந்த பகுதியில் கரோனா தொற்று குறித்து எந்த அச்சமும் இல்லாமல் பொதுமக்கள் இருந்து வருகிறார்கள்.
இந்தநிலையில் இவர்களின் தியாக பணிகளுக்கு மரியாதை செய்யும் வகையில் கிள்ளை நகர திமுக சார்பில், கட்சியின் தலைமை குழு உறுப்பினர் கிள்ளை ரவீந்திரன், தூய்மை பணியாளர்கள் அனைவரையும் அதேபகுதியில் உள்ள சமூதாய கூடத்திற்கு அழைத்து அவர்களின் கால்களுக்கு தண்ணீர் ஊற்றி கழுவி, பின்னர் பொட்டு வைத்து, உதிரி பூக்களை பாதத்தில் தூவி, கழுத்தில் மாலை அனிவித்து, அவர்களுக்கு மரியாதை செய்தார். பின்னர் தூய்மை பணியாளர்களின் பணியை அனைவரும் மதிக்கவேண்டும். அவர்களின் பணியை போற்றவேண்டும் என உறுதிமொழியை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் எடுத்துக்கொண்டனர். அப்போது தூய்மை பணியார்கள் கண்களில் ஆனந்த கண்ணீர் நிரம்பியவாறு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். இது அங்கிருந்தவர்களின் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
இதனைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் அனைவரையும் சமூக இடைவெளியில் அமர வைத்து அசைவ பிரியாணி பரிமாறப்பட்டது. மேலும் அவர்களுக்கு கரோனா நேரத்தில், அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் அரிசி, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிள்ளை பேரூராட்சி செயல் அலுவலர் தங்கவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு, மாவட்டக்குழு உறுப்பினர் கற்பனைச்செல்வம், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.