ADVERTISEMENT

பொன்னியின் செல்வன் ஒற்றன் பாதை; சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வீராணம் ஏரி

04:07 PM Nov 01, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வரலாற்றுக் கதைகளில் பொன்னின் செல்வன் கதை தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய நாட்டிலுள்ள அனைவராலும் ஈர்க்கப்பட்ட கதை. இந்தக் கதையைத் திரைப்படமாக எடுக்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் செய்து தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் கதை திரைப்படமாக்கப்பட்டு முதல் பாகம் வெளியாகி உள்ளது. இது தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதேநேரத்தில் சோழர்கால ஆட்சியில் முக்கிய இடமாக விளங்கிய வீரநாரயணன் ஏரி, காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கடம்பூர், பழையாறை, கங்கைகொண்டசோழபுரம், சுவாமி மலை, தஞ்சை அரண்மனை உள்ளிட்ட பகுதியைத் திரைப்படத்தில் சிறிதளவு கூட காட்டாமல் வேறு ஏதோ இடங்களைக் காட்டி பெயரை சுட்டிக்காட்டி படமாக்கப்பட்டுள்ளது என வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்கள் மத்தியில் இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் படத்தைப் பார்த்தவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அத் திரைப்படத்தில் ஒற்றனாக வந்தியத்தேவன், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீரநாராயணன் ஏரிக்கரையில் குதிரையில் வருவதையும் காட்டுமன்னார்கோவில் அருகே ஆதித்த கரிகாலன் இருந்த கடம்பூர் அரண்மனை, கும்பகோணம் சுவாமிமலை, பழையாறை, கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சை அரண்மனை உள்ளிட்ட பல்வேறு இடங்களின் வரலாறுகளை அறிந்து அந்த இடங்களைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்துடன் அந்தந்தப் பகுதிகளில் சுற்றுலா செல்வதற்காகத் தயாராகி வருகிறார்கள் என சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் தமிழக அளவில் கூறுகின்றார்கள்.

இதில் ஆந்திராவில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு 30-க்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து 4 பிரிவாகப் பிரிந்து வீரநாராயணன் ஏரி, கும்பகோணம், தாராசுரம், பழையாறை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றிப் பார்த்துள்ளனர். அதேபோல் கடந்த இரு நாட்களுக்கு முன்பு சென்னை கேளம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு சுற்றுலா நிறுவனம் மூலம் ஒற்றன் பாதை என ஒருங்கிணைக்கப்பட்டு பொன்னியின் செல்வன் படத்தில் கதையாக்கப்பட்ட வழித்தடத்தில் பயணம் செய்வது என்று முடிவு செய்து அவர்கள் வீரநாராயணன் ஏரி, கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்டனர்.

இதில் அவர்கள் வீரநாரயணன் ஏரியில் அமர்ந்து ஏரியின் அழகை ரசித்து வந்தியத்தேவன் இந்த வழியாகத்தான் சென்றாரா என அந்த ஏரியில் சிறிது நேரம் நடந்தார்கள். ஏரியின் அழகைப் பிரமிப்புடன் பார்த்த அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வீரநாராயணன் ஏரியைப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் கூட்டம் தினந்தோறும் வழக்கத்துக்கு மாறாக வந்து கொண்டிருப்பதாக அப்பகுதியில் இருக்கும் வணிகர்கள் கூறுகின்றனர்.

அதே நேரத்தில் சுற்றுலா வருபவர்கள் வீரநாராயணன் ஏரி 17 கிலோமீட்டர் நீளம் உள்ளது. இதில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் எந்தத் திட்டமும் இல்லை. இது ஒரு வழித்தடம் போல் உள்ளது. எனவே தற்போது பொன்னியின் செல்வன் மூலம் உத்வேகம் அடைந்தவர்கள் ஏரிக்கு வரத் தொடங்கியுள்ளனர். வீராணம் ஏரியை அரசு சுற்றுலாத் தளமாக மாற்ற வேண்டும். சிதம்பரம் நடராஜர் கோயில், பிச்சாவரம் படகு சவாரி, வீராணம் ஏரி உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து சுற்றுலா மையமாக அமைக்க வேண்டும். வீராணம் ஏரியை வெட்டிய முதலாம் பராந்தக சோழன் ராஜாதித்தன் சிலையை வீராணம் ஏரியின் கரையில் அமைத்து, அங்கு பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட வேண்டும்.

வீரநாராயணன் ஏரி மூலம் தற்போது 47 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறும் நிலையில் தற்போது இந்த ஏரியைச் சுற்றுலா தளமாக மாற்றினால் இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் வாழ்வாதாரம் வளர்ச்சி அடையும். மேலும் வரலாற்றைப் படமாக எடுக்கும்போது சம்பந்தப்பட்ட இடத்தைக் காட்டினால் இன்னும் திரைப்படத்திற்கு வலு சேர்க்கும். ஆனால் இவர்கள் இதனை மறைத்து வேறு இடத்தைக் காட்டுவது அனைவருக்கும் ஏமாற்றமாக உள்ளது. இனி வரும் பாகங்களிலாவது இந்த இடங்கள் அனைத்தையும் காட்டுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என வீராணம் ஏரியின் ராதா மதகு பாசன சங்கத் தலைவர் ரெங்கநாயகி கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT