Skip to main content

நலம் பெற்று வீடு திரும்பினார் "பொன்னீலன்"

Published on 20/05/2020 | Edited on 20/05/2020

மக்களின் வாழ்வியல் எதார்த்தத்தை சமூக பார்வையுடன் இலக்கியமாக படைக்கும் முற்போக்கு எழுத்தாளர்களில் தனித்துவமானவர் நாவலாசிரியர் பொன்னீலன். கல்வித்துறையில் உயர் பொறுப்பு வரை பணியாற்றி ஒய்வு பெற்றவர். ஒய்வுக்கு பிறகு அவரது சொந்த ஊரான குமரி மாவட்டம் மணிகட்டிபொட்டல் என்ற கிராமத்தில் அவரது துணைவியாருடன் வசித்து வருகிறார். இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி மூத்தவர் குமரி மாவட்டம் களியகாவிளை என்ற ஊரில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் இளையவர் குடும்பத்துடன் சேலத்தில் வசிக்கிறார்.

 

"Ponnilan" returns home

 

பொன்னீலனின் வரலாற்றுப் படைப்பு "புதியதரிசனங்கள்" என்ற நாவல். இந்நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது பெற்றார் பொன்னீலன். கரிசல் போன்ற நாவலுக்காக தமிழக அரசு விருது பெற்றார். 81 வயதான அவரை இடதுசாரி இலக்கிய உலகம் அன்புடன் "அண்ணாச்சி" என அழைப்பதுண்டு.

இந்நிலையில் சென்ற 15-ஆம் தேதி அதிகாலை பொன்னீலனுக்கு  உடல் நலம் குன்றியது இதனால் குமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள மூகாம்பிகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் இருதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இந்நிலையில் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பு ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடத்தப்பட்டது அப்போது இருதயத்தில் இருந்த  அடைப்புக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்யப்பட்டது.

ஒரு அடைப்புக்கு ட்டன்ட் பொருத்தப்பட்டு மற்ற இரண்டு அடைப்பு களுக்கும் மருந்து மூலம் சரியாக பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொன்னீலன் முழுமையாக நலம் பெற்று இன்று 20ஆம் தேதி மதியம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவரது மூத்தமகள் வசித்துவரும் களியக்காவிளை வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


தமிழகத்தில் முற்போக்கு இலக்கியவாதிகளில் முதன்மையானவராக உள்ள பொன்னீலனுக்கு  உடல் நலக்குறைவு ஏற்பட்டது இலக்கியவாதிகள் மத்தியில் துயரத்தை கொடுத்தது. ஆனால் அவர் முழு நலம் பெற்று வீடு திரும்பியது எல்லோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவுக்கு தனியாகச் செல்ல வேண்டாம் எனத் தோழிகளிடம் கூறினேன்” - பிரபல எழுத்தாளரின் பரபரப்பு கருத்து

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
sensation by America writer says I have told my friends not to go to India alone

ஸ்பானிஷ் பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் மோட்டார் சைக்கிளிலேயே உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டு வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 66 நாடுகளுக்கு இந்த தம்பதி பயணம் செய்துள்ளனர். 

இதுவரை இத்தாலி, ஈரான் எனப் பல நாடுகளுக்குச் சென்ற இந்த தம்பதி ஆப்கானிஸ்தான் சென்றதைத் தொடர்ந்து அடுத்த பயணமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தனர். அந்த வகையில், கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இருவரும் தனித்தனி பைக்கில் ஜார்க்கண்ட் வழியாக பாகல்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அன்று இரவு தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற ஒரு குக்கிராமத்தில் தற்காலிகமாக டெண்ட் அமைத்து இருவரும் தங்கினர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இளைஞர்கள் சிலர், இருவரையும் தாக்கியதோடு அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சமூக வலைத்தளங்களில் அந்த தம்பதி வீடியோ பதிவிட்டனர். அந்த பகுதியில் ரோந்து பணிக்கு வந்த காவல்துறையினர், காயமடைந்த அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தங்களுக்கு நேர்ந்த முழு துயரத்தையும் அப்பெண் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து விசாரித்த நிலையில், குற்றவாளி ஒருவன் சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.

sensation by America writer says I have told my friends not to go to India alone

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான டேவிட் ஜோசப் வோலோட்ஸ்கோ, இந்த சம்பவம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவில் வாழ்ந்தபோது, நான் கண்ட பாலியல் தொல்லைகள் போல் வேறு எங்கும் கண்டதில்லை. சில நாட்கள் மட்டுமே அங்கு தங்கியிருந்தாலும், துன்புறுத்தப்படாமலோ அல்லது தாக்கப்படாமலோ அல்லது பாலியல் வன்கொடுமை செய்யப்படாமலோ கூட ஒரு பெண் பயணியை நான் சந்தித்ததில்லை.

நான் இந்தியாவை நேசிக்கிறேன். உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக இந்தியா எப்போதும் இருக்கும். ஆனால் அங்கு தனியாக பயணம் செய்ய வேண்டாம் என்று பெண் தோழிகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறேன். இந்திய சமூகத்தில் இது ஒரு முக்கியப் பிரச்சனையாகவே இருக்கிறது. இதில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இவருடைய கருத்துக்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.  

Next Story

எழுத்தாளர் தேவிபாரதியை நேரில் சென்று வாழ்த்திய அமைச்சர்!

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
Writer Devibharathi greeted the minister in person

ஒவ்வொரு வருடமும் இலக்கிய ஆளுமைகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் சாகித்திய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இந்த வருட விருது தமிழ் எழுத்தாளரான தேவிபாரதிக்கு அவர் எழுதிய ‘நீர்வழிபடூஉம்’ என்ற நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் டெல்லியில் அவருக்கு மத்திய அரசின் சார்பில் விருது வழங்கி சிறப்பு சேர்க்கப்படுகிறது.

எழுத்தாளர் தேவிபாரதி சாதாரண எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். திருப்பூர் மாவட்டம் பழைய கோட்டை அருகே உள்ள நொய்யல் நதிக்கரையில் இருக்கும் புது வெங்கரையாம்பாளையம் என்ற குக்கிராமத்தில்தான் அவர் வசித்து வருகிறார். சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டவுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல் பல்வேறு தலைவர்கள் தொலைப்பேசி மூலமும் பல எழுத்தாளர்கள், அவரின் நண்பர்கள் எனப் பலரும் நேரில் சென்று தேவிபாரதியை வாழ்த்தி வருகிறார்கள்.

அந்த வரிசையில் தமிழக செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரான மு.பெ. சாமிநாதன், எழுத்தாளர் தேவிபாரதியை அவர் வசித்து வரும் கிராமத்திற்குச் சென்று எழுத்தாளர் தேவிபாரதியை தமிழக அரசின் சார்பாகவும் முதல்வர் சார்பாகவும் வாழ்த்தி கௌரவித்தார். அப்போது அவருடன் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் உடன் இருந்தார். சாகித்திய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் தேவிபாரதியை அமைச்சர் நேரில் சென்று வாழ்த்தியது அந்த கிராம மக்களையும், எழுத்தாளர்களையும், இலக்கிய ஆர்வலர்களையும் உற்சாகமடையச் செய்துள்ளது.