Skip to main content

சிலை கடத்தல் வழக்குகளை முடிக்க முகாமிட்டு அதிரடிகாட்டும் பொன்.மாணிக்கவேல்

Published on 27/04/2019 | Edited on 27/04/2019

சிலை கடத்தல் வழக்குகளை விரைவில் முடிப்பதற்காக கும்பகோணத்தில் கடந்த சில நாட்களாக சிறப்பு அதிகாரியான பொன்.மாணிக்கவேல் முகாமிட்டு அதிரடி காட்டிவருகிறார்.

 

pon manikavel

 

நம் முன்னோர்களால் கலைநயத்துடன் உருவாக்கிய சிலைகள் தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு அழகு சேர்த்துவந்தன. அதன் ஒவ்வொன்றின் மதிப்புகளும் வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் மதிப்பிடப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழமையான, சிதலமடைந்த, கேட்பாரற்ற நிலையில் இருந்த கோயில்களின் பிரதான சிலைகள், ஐம்பொன் மற்றும் விலைமதிக்க முடியாத உலோகத்தாலான சிலைகள், என ஆயிரக்கணக்கான சிலைகள் திருட்டு போனது. இது தொடர்பாக போலீஸ் நிலையங்களிலோ,  கோயில் அதிகாரிகளிடமோ புகார் செய்தும் பயனில்லாமல் இருந்தது.  போலீசாரும், அதிகாரிகளும் இதை பெரிதாக எடுத்துக்கொண்டு விசாரிக்கவில்லை.

 

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள பந்தநல்லூரை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் சிலை கடத்தல் தடுப்பு அதிகாரியான ஐ,ஜி பொன்மாணிக்கவேலுவை நியமனம் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிலை கடத்தலை தடுக்கவும், திருடுபோன சிலைகளை கண்டுபிடித்து மீட்கவும், சிலை தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை, நியமனம் செய்ய உத்தரவிட்டது. அதோடு அவருக்கு தேவையான போலீஸ் அதிகாரிகளையும், போலீசாரையும் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டனர்.

 

 

சிறப்பு அதிகாரியாக பதவியேற்ற நாள் முதல் அதிரடியாக களமிறங்கி சிலைத்திருட்டை தடுத்ததோடு, புகழ்பெற்ற சிலைகள் வெளிநாடுகளிலிருந்ததை  மீட்டுக் கொண்டு வந்தார்.பந்தநல்லூர், திருவாரூர் ,கும்பகோணம் , உள்ளிட்ட சிலை காப்பகங்களில் சிலைகளின் உண்மை தன்மையை கண்டறிந்து வருகிறார்.

 

இதற்கிடையில்,தமிழகத்தில் உள்ள 531 சிலை திருட்டு வழக்குகளை கும்பகோணம் கோர்ட்டில் தான் நடத்த வேண்டும் என கோர்ட்டில் ஆணையை வாங்கினார். அதன்படி அனைத்து வழக்குகளும் கும்பகோணம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சிலைகள் கடத்தல் வழக்கு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி, அறநிலை துறை உயர் அதிகாரிகள் முதல் அடிமட்ட ஊழியர்கள் வரையிலும், சிலைகடத்தல் மாபியாக்கள் வரை அனைவரையும் கண்டுபிடித்து சிறையில் அடைத்தார்.சிலை திருட்டில் ஈடுபட்ட போலீசாரையும்  விட்டுவைக்காமல் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

 

 சிலைவழக்கு சூடுபிடித்துவந்த நிலையில் பொன்,மாணிக்கவேல் பதவி காலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தோடு முடிந்தது. பொன்,மாணிக்கவேலுவிற்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் பொன்மாணிக்கவேலுவிற்கு  ஓரு ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. பதவி நீட்டிப்பு செய்யப்பட்டு 5 மாதங்கள் கடந்துவிட்டன.  இன்னும் எஞ்சி இருக்கிற ஏழு மாதத்திற்குள் அனைத்துக்கு வழக்குகளையும் முடிக்க வேண்டும் என  கும்பகோணத்தில் கடந்த 3 நாட்களாக முகாமிட்டு பரபரப்பாக கோப்புகளை படித்தும், விசாரித்தும் வருகிறார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேருந்து நிலையத்தில் உள்ள சிலைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
court order to remove idols from bus stand

பேருந்து நிலையத்தில் உள்ள தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேருந்து நிலையத்திற்கு அருகே வைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையை அகற்றக்கோரி தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகி  ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஜெயலலிதாவின் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகத் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இந்த மனு இன்று (13.03.2024) விசாரணைககு வந்தது.  அப்போது, “வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார், காமராஜர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். உள்ளிட்ட அனைத்து தலைவர்களின் சிலைகளையும் அகற்ற வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது” என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

1,200 ஆண்டுகள் பழமையான திருமால், வைஷ்ணவி சிற்பங்கள் கண்டெடுப்பு!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
1,200-year-old Tirumal, Vaishnavite sculptures discovered in virudunagar

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகில் அம்மாபட்டி ஊராட்சி, களத்தூரில் 1,200 ஆண்டுகள் பழமையான முற்காலப் பாண்டியர் கலைப்பாணியில் உள்ள திருமால், வைஷ்ணவி, லிங்கம், நந்தி, காளி சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. களத்தூர் அர்ச்சுனா ஆற்றின் கரையில், பழமையான திருமால் சிற்பம் இருப்பதாக அம்மாபட்டி வீரையா கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் கூறியதாவது, “திருமால், மாயோன் என தொல்காப்பியத்திலும், நெடுமால், நெடியோன், நெடுமுடி என பிற இலக்கியங்களிலும் குறிப்பிடப்படுகிறார். இங்கு பீடத்தின் மீது அமர்ந்த நிலையில், நான்கு கைகளுடன், கர்த்தரி முக முத்திரையில், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன்னிரு கைகளை தொடையில் வைத்து, கிரீட மகுடத்துடனும், காதுகளில் மகர குண்டலங்களுடனும் திருமால் காட்சியளிக்கிறார். முகம் தேய்ந்துள்ளது. சக்கரம் பக்கவாட்டில் திரும்பி பிரயோகச் சக்கரமாக உள்ளது. இடது காலை மடக்கி, வலது காலைத் தொங்கவிட்டு சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். வலது மார்பில் ஸ்ரீவத்ஸமும், கிரீடமகுடத்தின் பின்பக்கம் சிரச்சக்கரமும் உள்ளன. கைகளின் மேற்பகுதியின் நடுவில் தோள்வளை அணிந்துள்ளார். சிற்பம் 109 செ.மீ உயரமுள்ளது.

இதன் அருகில் 82 செ.மீ உயரமும், 46 செ.மீ அகலமும் உள்ள பலகைக் கல்லில் திருமாலின் பெண் சக்தியான வைஷ்ணவியின் புடைப்புச் சிற்பம் உள்ளது. சப்தகன்னியரில் ஒருவரான இவர், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன்னிரு கைகளை தொடையில் வைத்திருக்கிறார். சிற்பம் சேதமடைந்துள்ளது. இதன் வடக்கில் நந்தியும், ஆவுடை இல்லாத லிங்கமும் உள்ளன. இங்கிருந்து 300மீ தூரத்தில் 2½ அடி உயரமுள்ள எட்டுக்கை காளி சிற்பம் உள்ளது. திருமால் கையிலுள்ள பிரயோகச் சக்கர அமைப்பு மூலம், இச்சிற்பங்கள் கி.பி.9-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம். அக்காலகட்டத்தில் இவ்வூரில் அருகருகே சிவன், திருமால், காளி கோயில்கள் இருந்துள்ளதை அறிய முடிகிறது. கி.பி.9-ம் நூற்றாண்டு வரை வைணவக் கோயில்களில் சப்தமாதர் வழிபாடு இருந்துள்ளது. 

1,200-year-old Tirumal, Vaishnavi sculptures discovered in virudunagar

அருகிலுள்ள மேட்டில் பெரிய கருங்கற்கள் உள்ளன. இவை இரும்புக்காலத்தைச் சேர்ந்த கல்வட்டம், கல்திட்டையின் கற்களாக இருக்கலாம். இதில் இருந்த கற்களை எடுத்து லிங்கத்தைச் சுற்றி வைத்துள்ளனர். மேலும் நுண்கற்காலக் கருவி, செங்கற்கள், சிவப்பு பானை ஓடுகள், இரும்புத் தாதுக்கள், இரும்புக்கசடுகள், சுடுமண் ஓடுகள் போன்றவையும் அங்கு சிதறிக் கிடக்கின்றன. ஒரு செங்கலின் அளவு, நீளம் 33 செ.மீ, அகலம் 16.5 செ.மீ, உயரம் 7 செ.மீ. ஆகும். இதன் மூலம் இவ்வூரில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்புக் காலத்தில் இரும்பு உருக்கு உலையும், மக்கள் குடியிருப்பும் இருந்துள்ளது எனலாம்.  

1,200-year-old Tirumal, Vaishnavi sculptures discovered in virudunagar

இவ்வூருக்கு அருகிலுள்ள நத்தம்பட்டி, மங்கலத்துக்கும் வைணவம், சைவம் சார்ந்த தொடர்புகள் உள்ளன. மங்கலம் சிவன் கோயில் கல்வெட்டில் களத்தூர் குளத்தின் ராஜேந்திர சோழன் மடை குறிப்பிடப்படுகிறது. நத்தம்பட்டியில் 8-ம் நூற்றாண்டு திருமால் சிற்பம் ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்டுள்ளது. அருகருகே உள்ள இம்மூன்று ஊர்களிலும் இரும்புக் காலத்திலும், வரலாற்றின் இடைக்காலத்திலும் மக்கள் வாழ்ந்துள்ளனர். இவ்வூர்கள் சேரநாட்டிலிருந்து மதுரை செல்லும் வணிகப் பெருவழியில் உள்ளன. எனவே வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் இடங்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என அவர்கள் தெரிவித்தனர்.