Skip to main content

எட்டுவழிச் சாலையை கைவிட்டு, இருக்கும் மூன்று சாலைகளை விரிவாக்கம் செய்ய பொன்.கௌதமசிகாமணி எம்.பி கோரிக்கை

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

Pon.Gauthamasikamani MP's request to widen the three abandoned roads in Chennai to Salem.

 

 

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தினை கைவிடக் கோரியும் ஏற்கனவே சென்னை-சேலம் இடையே இருக்கும் மூன்று நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தி பயன்படுத்தக்கோரியும் நாடாளுமன்றத்தில் 377-வது விதியின் கீழ் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி வலியுறுத்தினார்.

 

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை என்பது பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலங்களை அழித்து, வாழ்வாதாரங்களை ஒழித்து, நீர்நிலைகளை சூறையாடி, மலைகளை குடைந்து, மேய்ச்சல் நிலங்களை தார் ரோடாக்கி, மரங்களை அழித்து, காட்டு விலங்குகளின் வாழ்விடங்களை, வழித்தடங்களை காணாமலாக்கி, இயற்கையின் சமன் நிலையை ஒழித்து கட்டப்போகிறதென்பது ஊரறிந்த ரகசியம். சேலம் - சென்னை இடையே ஏற்கனவே மூன்று நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. 

 

NH-48, NH-2 சாலையானது சென்னை - காஞ்சிபுரம் - கிருஷ்ணகிரி - தருமபுரி வழியாக சேலத்திற்கு 352.7 கிலோமீட்டர் நீளத்தில் நான்கு வழி, ஆறு வழிச்சாலையாக உள்ளது. 

 

NH-48 மற்றும் SH-18 சாலையானது 331.89 கிலோமீட்டர் இரண்டு வழி, நான்கு வழிச்சாலையாக உள்ளது. NH-32 சாலையானது சென்னை - விழுப்புரம் வழியாக 334.28 கிலோமீட்டர் நீளத்தில் இரண்டு வழி, நான்கு வழிச் சாலையாக இருக்கிறது. 

 

மேலும் கரோனா ஊரடங்கினால் தொழில்கள் பாதிப்படைந்து மக்கள் கடும் பொருளாதார நட்டத்தில் இருக்கும் இச்சூழலில் எட்டு வழிச்சாலைக்காக ரூ 10,000 கோடியை விரயம் செய்வது எந்த சூழலிலும் ஏற்புடையதல்ல. அது மட்டுமன்றி இந்த திட்டம் பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்களையும் விவசாயிகள் வாழ்வாதாரத்தையும் சீரழிப்பதோடு இந்த திட்டத்திற்காக இலட்சக் கணக்கான மரங்களும் வெட்டி வீழ்த்தப்படும். இந்தத் திட்டம் சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் மாவட்டங்களிலுள்ள மக்களின், விவசாயிகளின் வாழ்வை அழித்து நடுத்தெருவுக்கு கொண்டுவந்துவிடும். எனவே எட்டு வழிச் சாலைக்கு பதிலாக ஏற்கனவே சென்னைக்கும் சேலத்திற்கும் இடையேயுள்ள மூன்று சாலைகளை விரிவாக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். மேலும் சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தினை கைவிட வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்” என கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி நாடாளுமன்றத்தில் 377-வது விதியின் கீழ் வலியுறுத்தினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘எட்டுவழிச்சாலை திட்ட அரசாணையை ரத்து செய்யுங்கள்’ - 5 மாவட்டத்தில் போராட்டம் நடத்த ஆலோசனை! 

Published on 29/01/2022 | Edited on 29/01/2022

 

‘Cancel the eight-lane project ordinance

 

சேலம் டூ சென்னை இடையே காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் என 5 மாவட்டங்கள் வழியாக 250 கி.மீ தூரத்துக்கு புதியதாக 8 வழிச்சாலை அமைக்க பாஜக அரசு முடிவு செய்து அதற்கான அரசாணையை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது. இதற்கு திமுக, பாமக, இடதுசாரிகள் உட்பட சில கட்சிகள், விவசாய சங்கங்கள் அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. ஆனால், அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அத்திட்டத்தை கைவிடாமல் செயல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதில் பலரது நிலங்களும் கையகப்படுத்தப்பட்டது. அதனை எதிர்த்து போராடிய மக்கள் கைது செய்யப்பட்டனர். 

 

இந்நிலையில், உச்சநீதிமன்றம் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு அதன்பின் இந்த திட்டத்தை செயல்படுத்துங்கள் எனச்சொல்லி பழைய அரசாணையை ரத்து செய்து, நிலங்களை ஒப்படைக்கச்சொல்லி உத்தரவிட்டது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைதியாக இருந்த இந்த விவகாரம் இப்போது மீண்டும் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் உயிர்த்தெழ முயற்சிக்கிறது.

 

சமீபத்தில் ஒன்றிய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்காரி, தமிழக அரசிடம் 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும் என அழுத்தம் தந்திருக்கிறார். அதேபோல், சமீபத்தில் தர்மபுரி டி.ஆர்.ஓ. ‘சுற்றுச்சூழல் அனுமதி பெற்று அரசு வழிகாட்டுதல்படி, நில எடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கு’ என தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் பெரும்பட்டம் கிராமத்தில் எட்டு வழிசாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் தலைமையில் இன்று (29 ஆம் தேதி) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், சட்டமன்ற தேர்தலின்போது, 8 வழிச்சாலை திட்டத்தின் அரசாணை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அந்த அறிக்கையை நினைவூட்டும் விதமாக 5 மாவட்டங்களில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

 

 

Next Story

விவசாயிக்கு விவசாயியே துணை - எட்டு வழிச்சாலை எதிர்ப்பு போராட்டத்தில் ஆச்சரியம்!!

Published on 09/09/2020 | Edited on 09/09/2020

 

8 way road farmers support to farmers

 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வடமாத்தூர் கிராமத்தில் எட்டு வழிச் சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பின் சார்பில் மஞ்சுளா தலைமையில் எட்டு வழிச் சாலை அமைப்பதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வலியுறுத்தி சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கறுப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலை, திருவண்ணாமலை - சேலம் செல்லும் சாலை ஆகிய சாலைகள் முழுமையாகச் சேதம் அடைந்த நிலையில் அதனை அகலப்படுத்திச் சரிவரச் சாலை அமைக்காத மத்திய மாநில அரசுகள், விவசாய நிலங்களை அழித்து எட்டு வழிச்சாலை மற்றும் பசுமை சாலை என அறிவித்து பசுமையை அழிக்க நினைக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், எட்டு வழிச் சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 8 வழிச்சாலை வழக்கை திரும்பப்பெறவேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்னிறுத்திக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

 

இந்தக் கூட்டத்தில் 8 வழிச்சாலை அமைவதால் தாங்கள் பாதிக்கப்படாத  சூழ்நிலையிலும் 8 வழிச்சாலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக இந்தத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்திப் பல விவசாயிகள் கலந்துகொண்டனர். 

 

எட்டு வழிச் சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அபிராமன் விவசாயச் சங்கத்தைச் சார்ந்த அழகேசன் மாவட்ட விவசாயச் சங்கத் தலைவர் வெங்கடேசன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர். மாநிலம் முழுவதும் இதேபோல் விவசாயிகளைத் திரட்டி போராடப்போவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.