Skip to main content

பொங்கல் பண்டிகை... உச்சத்தில் காய்கறி விலைகள்...!

Published on 15/01/2020 | Edited on 15/01/2020

தைப்பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிரழர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த ஒரு வாரமாகவே தலைப் பொங்கல் கொண்டாடும் தம்பதிகளுக்கு காய்கனிகள் மற்றும் பொங்கல் பொருட்கள் வாங்குவது அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டம் முழுவதும் வழக்கமான காய்கனிச் சந்தைகள் தவிர பல்வேறு பொது இடங்களிலும் திரும்பிய பக்கமெல்லாம்  பொங்கல் பொருள்கள் விற்பனை கடைகள் முளைத்துள்ளன.

 

Pongal Festival-Vegetable prices high

 



கரும்பு, பனைஓலை, பனங்கிழங்கு, அடுப்புகட்டி, மண்பானை, காய்கனிகள் உள்ளிட்டவைகளின் விற்பனை களைகட்டியுள்ளது. இதே போல் பாளை, டவுண் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகளிலும் காய் கனிகள் லாரிகளிலும், சிறிய வாகனங்களிலும் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.  பாளையங்கோட்டை உழவர் சந்தையில் வழக்கமாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 30 டன் அளவிற்கு காய்கனிகள் வந்து விற்பனையாகும். இது கடந்த சனிக்கிழமை 40 டன்னாக உயர்ந்தது. நேற்று முன்தினம் 70 டன்னாக உயர்ந்தது. இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு 50 லட்சமாகும். நேற்று அதிகாலை முதல் 75 டன் அளவிற்கு இங்கு மட்டும் காய்கனிகள் வந்து குவிந்து விற்பனையாகின. 3 நாட்களில் இங்கு மட்டும் 185 டன் அளவிற்கு காய்கறிகள் விற்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் சில காய்கனிகள் வரத்து குறைவாக உள்ளதால் அவற்றின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன. குறிப்பாக இந்த சந்தையில் முருங்கைக்காய் 5 கிலோ அளவில் மட்டுமே நேற்று வந்தது. இதனால் ஒரு கிலோ முருங்கைக்காயின் விலை 180ஆக விற்கப்பட்ட நிலையில் நேற்று 200 ரூபாயாக உயர்ந்தது. வெளிச்சந்தைகளில் ரூ.225 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் கத்தரிக்காயின் விலை கிலோ 110லிருந்து 125 ஆக உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.125ஆக விற்கபடுகிறது. பல்லாரி விலை கிலோவிற்கு 65 ஆக உள்ளது.

 



மற்ற காய்கறிகளின் விலை(கிலோ) விபரங்கள் வெண்டைக்காய் 35, தக்காளி 28, புடலை 20, அவரை 65, பீர்க்கங்காய் 40, கொத்தவரை 24, பாகற்காய் (சிறியது) 50, பெரியது 24, மாங்காய் 130, இஞ்சி 74, பூசணிக்காய் 20, தடியங்காய் 15, சுரைக்காய் 12, கோவக்காய் 35, முள்ளங்கி 20, புதினா 35, கொத்தமல்லி 25, கருணை, சேனை, சேம்பு, சிறுகிழங்கு தலா 50, மரவள்ளி கிழங்கு 24, சீனி கிழங்கு 25 பனங்கிழங்கு (10 எண்ணம்) 60, தேங்காய் 42, உருளை 36, கோஸ் 24, பீட்ரூட் 40, சவ்சவ் 18. ரிங்பீன்ஸ் 76, பட்டர் பீன்ஸ் 170, பச்சைபட்டாணி 75, காலிபிளவர் 40 என்ற விலையில் விற்கப்படுகிறது. காய்கனிகளின் விலை உயர்ந்தாலும் பொங்கல் பண்டிகைக்காக மக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.

பாளையங்கோட்டை உழவர் சந்தையில் வழக்கமாக 100 கடைகள் மட்டுமே இயங்கும். கடந்த 3 தினங்களாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு200 க்கும் மேற்பட்ட உழவர்கள் இங்கு கடைகள் அமைத்துள்ளனர். இதனால் தராசு தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து 2 கடைகளுக்கு ஒரு தராசு கொடுக்கப்பட்டு சமாளிக்கப்பட்டது. சந்தை வளாகத்தில்  நடைபாதை  முழுவதும் கடைகளாக காட்சியளிக்கின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் கூட்டத்தையொட்டி விலையை அவ்வப்போது வியாபாரிகள் மாற்றுகின்றனர். நேற்றிரவு ஒரு கட்டு கரும்பு 250 என விற்கப்பட்டது. அதுவே நேற்று காலை 300 ஆக உயர்ந்தது. இதேபோல் ஒரு பனை ஓலை 20 முதல் 25 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

13வது நோன்பு நாளில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Ready-to-eat Biryani to bake on the 13th day of Lent

ஏப்ரல் மாதம் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகின்றனர். சூரியன் உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பர். மாலை 6 மணிக்கு மசூதிக்கு சென்று நமாஸ் செய்துவிட்டு உணவு உண்பார்கள். காலை 5 மணிக்கு முன்பாக உணவு உண்பதை நிறுத்திவிடுவர். நோன்பு காலத்தில் இயலாத மக்களுக்கு மதம் பார்க்காமல் உதவுவார்கள்.

வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச் சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர்.

சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து பிரியாணி தயார் செய்யும் பணி தொடங்கிய நிலையில் நள்ளிரவு ஒரு மணி வரை பிரியாணி சமைக்கப்பட்டது. இந்தப் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்ட நிலையில், மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.

Next Story

திடீரென சரிந்து விழுந்த தேர்; மயானக்கொள்ளை விழாவில் நடந்த சோகம்

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
The chariot that came grand and collapsed miserably; Tragedy at the funeral ceremony

வடமாவட்டங்களில் பிரபலமான மயானக் கொள்ளை திருவிழா வேலூரின் மிக முக்கியமான பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்றாகவும் உள்ளது. பாலாற்றங்கரையில் மயானக்கொள்ளை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி மார்ச் 9ஆம் தேதி  மயான கொள்ளை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இத்திருவிழாவையொட்டி வேலூர், விருதம்பட்டு, சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், மக்கான், சத்துவாச்சாரி, கழிஞ்சூர் மற்றும் நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், அங்காள பரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோவிலில் இருந்து பிரமாண்ட தேர் மூலம் ஊர்வலமாக பாலாற்றங்கரை சுடுகாட்டிற்கு எடுத்து வந்தனர்.

ஊர்வலத்தின் பின்னேயும் முன்னேயும் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் காளியம்மன், முருகன், சிவன், விநாயகர், அங்காளபரமேஸ்வரி அம்மன் போன்ற கடவுள் போல வேடமிட்டு சென்றனர். சிலர் கையில் சூலாயுதம் ஏந்தி ஆக்ரோஷமாக சென்றதும் பார்ப்பதற்கு தத்ரூபமாக அமைந்து மெய் சிலிர்க்கச் செய்தது.

ஊர்வலத்தில்  இளைஞர்கள் இளம் பெண்கள், சிறுவர்கள்  டி.ஜே.பாடல்களை ஒலிக்கவிட்டு குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர். சில ஆண்கள் பலர் பெண்கள் போல வேடமிட்டு, சிலர் எலும்பு துண்டுகளை வாயில் கவ்விய படியும், ஆட்டுக் குடலை மாலையாக அணிந்த படியும் ஊர்வலத்தில் சென்றது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

The chariot that came grand and collapsed miserably; Tragedy at the funeral ceremony

இதில் விருதம்பட்டு, கழிஞ்சூர், மோட்டூர், வெண்மணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 அடி உயரம் கொண்ட 3 தேர்களில் அங்காள பரமேஸ்வரி அம்மன் அலங்கரிக்கப்பட்டு வேலூர் பாலாற்றங்கரைக்கு ஊர்வலமாக வந்து சூறையாடல் நடைபெற்றது. சூறையாடல் முடிந்து 3 தேர்களும் திரும்பும் சமயம் மோட்டூர், வெண்மணி பகுதியை சேர்ந்த சுமார் 60 அடி உயரம் கொண்ட தேர் எதிர்பாராதவிதமாக சரிந்து கீழே விழுந்தது. தேர் சரிவதை பார்த்து அங்கிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் தப்பி ஓடி தப்பினர். ஆனாலும் வெண்மணி பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் (30) என்பவர் சிக்கிக்கொண்டார். அவரின் அலறலை கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். லேசான காயங்களுடன் அவர் சிகிச்சைபெற்று வருகிறார்.

பாலாற்றில் டிராக்டர் மூலமாக தேர் திரும்பும் போது மணல் மற்றும் அங்கு செய்யப்பட்டிருந்த உருவ பொம்மைகளால் தேர் நிலை தடுமாறி கீழே சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. நல்லவேளை பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.