Skip to main content

தமிழர்களின் பண்பாட்டு திருவிழா! களைகட்டும் பொங்கல் பெருவிழா!

Published on 14/01/2020 | Edited on 14/01/2020

திருவிழாக்களின் திருவிழா என்பது பொங்கல் திருவிழா எனலாம். தமிழர்களின் வாழ்வு, வாழ்வாதாரம், கலாச்சாரம், இயற்கை வழிபாடு, உழவுத் தொழிலுக்கு உதவிய இயற்கை தொடங்கி கால்நடைகள் வரை அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கும் உயிர் நேய  பண்பாடு, வீரத்தை வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டு, நண்பர்கள் - உறவுகளின் ஒன்று கூடல் என  அத்தனை அம்சங்களையும் கொண்டிருப்பது தான் தமிழர் திருநாளின் சிறப்பு.  பொதுவாகவே திருவிழாக்கள் கடந்த கால நிகழ்வுகளையும், வெற்றிகளையும் நினைவு கூறவும், தெய்வங்களை வணங்கவும் கொண்டாடப்படுவவை ஆகும். ஆனால் உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் மட்டும் இயற்கையை வணங்கவும், நன்றி தெரிவிக்கவும், உறவுகளை புதுப்பிக்கவும் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் வழங்கக் கூடியது. அறுவடைத் திருநாளான பொங்கல் தமிழர்களுக்கு உற்சாகத்தை அளிக்கக் கூடியது. இந்த இரு திருநாள்களும் வரும் போது மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

 

pongal celebrations at cuddalore

 

 

பொங்கல் திருநாளில் பொங்கல் பானையில் புத்தரிசியும், பாலும் கலந்து பொங்குவதைப் போன்று, தமிழர்கள் வாழ்க்கையில் வளங்களும், நலங்களும், மகிழ்ச்சியும், வளர்ச்சியும் பொங்க தைத்திருநாள் வகை செய்யும். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என நமது முன்னோர்கள் சொன்னது போல தை பிறக்கும் நாளில் தமிழர்கள் வாழ்விலும் புதிய வழிகள் பிறக்கும்; அவை மலர்ச்சியை அளிக்கும் என்பது நம்பிக்கை.

இத்தகைய பொங்கல் திருநாளை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கிலும் தமிழர்கள் வாழ்கின்ற எல்லா இடங்களிலும் தமிழ் மக்கள் தமது குடும்ப விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

தமிழ்நாட்டில் குடும்பங்களில் மட்டுமல்ல, அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என எல்லா இடத்திலும் கொண்டாடுகின்றனர். புதுச்சேரியில் தி.மு.க சார்பில் வெகு விமரிசையாக இன்று பொங்கல் கொண்டாடப்பட்டது. பெண்கள் கும்மி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். கடலூர் பெண்கள் கல்லூரியில்  நடந்த பொங்கல் விழாவில் பிரான்சு, பெல்ஜியம் ஆகிய வெளி நாட்டினர் கலந்து கொண்டு பொங்கலை கொண்டாடினர்.   

 

pongal celebrations at cuddalore

 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்  பொங்கல் விழாவை  முன்னிட்டு கோலம், கோகோ, கயிறு இழுத்தல், கபடி என பல்வேறு போட்டிகள் முதன்மை சார்பு நீதிபதி ஜெயசூர்யா தலைமையில் நடைபெற்றது. இந்த போட்டிகளில்  பெண் வழக்கறிஞர்கள் மற்றும் பெண் ஊழியர்கள் கலந்து கொண்டு கோலப்போட்டி, கோகோ, கயிறு இழுத்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் விளையாடினர். ஆண் வழக்கறிஞர்கள் கபடி போட்டியில் கலந்து கொண்டனர். கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, திட்டக்குடி விருத்தாச்சலம் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்  புகையில்லா போகியும்,  சமத்துவ பொங்கலும் கொண்டாடினர். .

மாணவர்கள் எவ்வித பாகுபாடும் இன்றி அனைவரும் ஒற்றுமையாக, சமத்துவ பொங்கலிட்டு சூரியனை வழிபட்டனர்.  பொங்கல் பானையில் பொங்கல் நிரம்பி வழியும் போது “பொங்கலோ… பொங்கல், பொங்கலோ… பொங்கல்..”  என உற்சாகமாக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாணவர்கள், ஆசிரியர்கள்  தமிழர்களின் பாரம்பரிய உடைகளான,  வேட்டி சட்டையியிலும், மாணவிகள் பட்டு சேலைகளும் அணிந்து வந்து தமிழ் கலாச்சாரத்தை வெளிப்படுத்தினர். மேலும் தமிழர் கலாச்சாரத்தை போற்றும் விதமாக கும்மியடித்தல்,  கோலமிடுதல், பரதநாட்டியம், கயிறு இழுத்தல், உள்ளிட்ட போட்டிகளிலும் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். 

பொங்கல் திருநாளுக்காக சந்தைகளில் மஞ்சள், பன்னீர் கரும்பு, போன்றவைகளை மக்கள் ஆர்வமுடன் வாங்குகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.