Skip to main content

பெண்ணிடம் தவறாக பேசிய பிரபல ரவுடி வெட்டிக்கொலை! 4 பேர் கைது! 

Published on 12/09/2020 | Edited on 12/09/2020

 

pondycherry incident police arrested 4 people

 

 

புதுச்சேரியை அடுத்துள்ள தமிழக பகுதியான கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்ன முதலியார் சாவடி எம்.ஜி.ஆர் நகரை  சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகன் மணவாளன் (27). பிரபல ரவுடியான இவர் மீது 2 கொலைகள் மற்றும் கொள்ளை, அடிதடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.  இந்நிலையில் நேற்று முன்தினம் (10.09.2020) இரவு மணவாளன் அங்குள்ள சுடுகாடு அருகே கருமாதி கட்டிடம் அருகே வெட்டப்பட்டு உயிரிழந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.  பின்னர் மணவாளனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செட்டிகுளம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து மணவாளனை கொன்ற குற்றவாளிகளை தேடி வந்தனர். 

 

இந்த நிலையில் நேற்று கோட்டக்குப்பம் அருகே தென்னந்தோப்பில் 4 பேர் கத்தியுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து போலீசார் அங்கு சென்று நான்கு பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். தலைமறைவாக இருந்த அவர்கள் ஆனந்த் (31) மற்றும் அவரது நண்பர்கள் எழிலரசன்(21), சையத்கலீல்(25) மற்றும் 17 வயது சிறுவன்  என தெரிந்தது. 

 

அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.  விசாரணையில், கொலை செய்யப்பட்ட மணவாளன் சின்னமுதலியார் சாவடியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். அதில் ஆனந்த் வாடகைக்கு  குடியிருந்துள்ளார்.  ஆனால் அவர் கடந்த நான்கு மாதங்களாக வாடகை பணத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

 

மணவாளன் கொலை வழக்கொன்றில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்திருப்பதால் புதுச்சேரியில் தங்கிக்கொண்டு எப்போதாவது சின்ன முதலியார் சாவடி வரும்போது ஆனந்திடம் பணத்தை கேட்டுள்ளார். மேலும் ஆனந்தின் மனைவியிடம் மணவாளன் செல்போனில் அடிக்கடி கேலி, கிண்டல் செய்வது, ஆபாசமாக பேசுவது, தவறாக நடக்க முயல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.  இதுபற்றி அறிந்ததும் ஆனந்த் மணவாளனிடம் சென்று 'ஏன் எனது மனைவிடம் ஆபாசமாக பேசுகிறாய்.... இத்துடன் நிறுத்திக்கொள்' எனக் கூறியுள்ளார். ஆனால் மணவாளன் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நிலைமை எல்லை மீறிப் போனதால் ஆத்திரமடைந்த ஆனந்த் தனது நண்பர்களுடன் சேர்ந்து மணவாளனை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார். அதன்படி மணவாளனை மது அருந்த சுடுகாட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர் 4 பேரையும் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,  கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

கொலை செய்யப்பட்ட மணவாளன் திருமணம் ஆகாதவர். ஏற்கனவே இதே பகுதியில் வீரமணி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ளவர். இவர் கொலை செய்யப்பட்டிருப்பது புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்