Skip to main content

குளங்களை மீண்டும் தூர்வார ரூ. 10 கோடி கேட்டு கிராமசபையில் தீர்மானம்... வெகுண்ட இளைஞர்கள்...!

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் ஊராட்சியின் கிராமசபைக் கூட்டம் முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஆலமரத்தடியில் நடந்தது. கூட்டத்தில் கிராமசபை சிறப்பு அலுவலர், ஊராட்சி செயலர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதில் பிளாஸ்டிக் ஒழிப்பு, குடிதண்ணீர் சேமிப்பு, பிரமத மந்திரி குடியிருப்பு திட்டம், கிராம ஊராட்சி வளர்ச்சித்திட்டம், பசுமை வீடு, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம், மகளிர் திட்டம் போன்ற பொதுவான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு கிராம மக்கள் பல தீர்மானங்களை மனுக்களாக கொடுத்தனர். 

grama sabha


இந்தநிலையில் தீர்மானம் எழுதப்பட்ட தீர்மானப் புத்தகத்தில் கொத்தமங்கலம் இளைஞர் மன்றத்தினரால் கிராமமக்களின் ஒத்துழைப்போடு சொந்த செலவில் தூர்வாரி சீரமைக்கப்பட்டு வரும் பெரியகுளம், கோடியகுளம், அய்யனார் கோயில்குளம் உள்பட 9 குளங்கள், ஊரணிகள் தூர்வாரி ஆழப்படுத்தவும், இந்த குளங்களுக்கு தண்ணீர் வரும் வரத்துவாரிகள், சீரமைக்கவும், சாலை ஓர வாய்க்கால்களை சீரமைக்கவும் என்று சுமார் ரூ. 10 கோடி க்கு அரசிடம் நிதி கேட்டு தீர்மானம் எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்து இளைஞர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். இளைஞர்கள் சீரமைத்த குளங்களையே மீண்டும் தூர்வாருவார அரசிடம் நிதி கேட்பதா? அதிலும் ரூ. 10 கோடிகளுக்கு நிதி கேட்கப்பட்டிருக்கிறது. மொத்தமே ஒரு கோடி ரூபாய் செலவிற்கும் சீரமைக்கலாமே என்று அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினார்கள். ஆனால் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் எல்லாம் 100 நாள் வேலை திட்டத்திற்கான கேட்கப்படும் நிதி என்று பதில் அளிக்கப்பட்டதால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை.

தொடந்து ராஜேந்திரன் என்பவர் ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றார். அதற்கு பலர் வீட்டுவரி, தண்ணீர் வரி செலுத்தவில்லை என்று ஊராட்சி செயலர் பதில் சொன்னார். மொத்தமாக ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றார். அதற்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் சில கணக்குகளை சொன்ன போது இது சரியான கணக்குகள் இல்லை என்றார். தொடர்ந்து பேசிய ராஜேந்திரன்.. மே 2019 வரை மின்சார வாரியத்திற்கு ஊராட்சி நிர்வாகம் ரூ. 49 லட்சத்தி 98 ஆயிரத்தி 817 ரூபாய் பாக்கி உள்ளதாக மின்சார வாரியம் கணக்கு சொல்கிறது. ஏன் மின்சாரவாரியத்திற்கு பணம் செலுத்தவில்லை. எப்போது எந்த நிதியில் பணம் செலுத்தப்படும் என்று கேள்வி கேட்டார். அதற்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பதில் கூறும் போது அனைத்து ஊராட்சியிலும் மின்கட்டணம் பாக்கி உள்ளது என்றார்.

தொடர்ந்து  தனி நபர் கழிப்பறைகளுக்கு ஏன் இன்னும் நிதி கொடுக்கவில்லை என்று பொதுமக்கள் எழுப்பிய கேள்விக்கு பயனாளிகள் பெயர்களில் குழப்பம் உள்ளதால் நிதி வரவில்லை. வந்ததும் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம சபை அதிகாரி பதில் கூறினார். அதேபோல வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் குளறுபடி உள்ளதால் அரசு திட்டங்களில் பயனடைய முடியவில்லை என்று கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அது மத்திய அரசு எடுக்கும் கணக்கு என்று பதில் சொன்னார். 

தொடர்ந்து ரெத்தினம் என்பவர்.. முதலில் கொத்தமங்கலத்தில் குளம், வரத்து வாய்க்கால்களை சீரமைத்து வரும் இளைஞர்களுக்கு கிராம சபை பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஹைட்ரோ கார்ப்பன் போன்ற பேரழிப்பு திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடாது என்ற தீர்மானங்களை மனுவாக கொடுத்தார். 

அனைத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை மனுவை இளைஞர்மன்றத்தினர் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கொடுத்தனர். பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் தீர்மான புத்தகத்துடன் இணைக்கப்பட்டது. ஆனால் எழுதவில்லை. பொதுமக்கள் கொடுத்த தீர்மானங்கள் எழுதப்படுமா என்பதும் கேள்விக்குறிதான்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி- சட்டக்கல்லூரி மாணவர் கைது

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Law college student arrested for fraud of getting a job in the Secretariat

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சன்னதிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (37). தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 25 அம் தேதி அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் 'நான் அரிமளம் பகுதிக்கு சென்றிருந்த போது மீனாட்சிபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்திக் அறிமுகமானார். தான் சென்னை செட்டியார் சட்டக்கல்லூரி மாணவர் என்றும் சோசியல் மீடியாவில் நிறைய பதிவுகள் போடுவேன். எனக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது என்றும் சொன்னார்.

அதன் பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தலைமை செயலகத்தில் யாருக்காவது வேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள் வாங்கித் தருகிறேன் என்றார். அப்போது எனக்கே வேலை வேண்டும் என்றேன். அதற்கு ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார். நானும் அவர் சொன்னதை நம்பி நான் சேமித்து வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்துவதாக சொன்ன போது வேண்டாம் நேரில் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னவர் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கார்த்திக் புதுக்கோட்டை வந்திருப்பதாக தெரிந்தது. நானும் என் நண்பன் பாலகிருஷ்ணனும் அன்று மாலை புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சந்தித்து முதல் தவணையாக ரூ.1 லட்சம் பணமாக கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்டவர் மீதி ரூ.2 லட்சத்தை ரெடி பண்ணுங்க என்று சொல்லிவிட்டு போனார்.

அதன் பிறகு வேலை என்னாச்சு என்று கேட்க பலமுறை அவரை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் தான் இன்று (ஏப்ரல் 25 ஆம் தேதி) அறந்தாங்கி எம்ஜிஆர் சிலை அருகே நான் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு நபர் என்னிடம் நங்கள் தான் சத்திரயாரஜா என்று கேட்டவர் கார்த்திக் உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார் என்று சொல்லிவிட்டு அவரது செல்போனில் வாட்ஸ் அப் காலில் கார்த்திக்கிடம் பேசச் சொன்னார். அப்போது ஏன் என் போனை எடுக்கவில்லை. என் வேலை, பணம் என்னாச்சு என்று கேட்ட போது, உன் பணம் வெளியில் கொடுத்துவிட்டேன். இனிமேல் பணமும் இல்லை, வேலையும் இல்லை என்று சொன்னதோடு இனிமேல் பணம் கேட்டால் எனக்குத் தெரிந்த காரைக்குடி ரவுடிகளை வைத்து உன்னை தீர்த்துக்கட்டிவிடுனே் என்று கொலை மிரட்டல் செய்ததோடு தகாத வார்த்தைகளிலும் பேசிவிட்டு போனை நிறுத்திவிட்டார். என்னிடம் போனைக் கொடுத்த நபரும் என்னை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

எனக்கு தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் பணமும் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டு என்னையும் என் குடும்பத்தையும் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக் மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தையும் மீட்டுத் தர வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார்.

புகார் குறித்து வழக்கு பதிவு செய்த அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கருணாகரன் தனிப்படை அமைத்து வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த சட்டக்கல்லூரி மாணவர் கார்த்திக்கை சென்னையில் கைது செய்து அறந்தாங்கி காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். மேலும் விசாரனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சென்னை முதல் அறந்தாங்கி வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.