p

புதுச்சேரி முத்தியால்பேட்டை மாணிக்க முதலியார் தோட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் என்பவரின் மகன் பிரதீஷ் (26), பெயிண்டர். நேற்று இரவு முத்தியால்பேட்டை மார்க்கெட்டில் இருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மூன்று பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினார்கள். உடனே பிரதீஷ் அவர்களிடம் இருந்து தப்பி தனது வீட்டிற்கு ஓட முயன்றார்.

ஆனால் அந்த கும்பல் பிரதீஷை ஓட, ஓட விரட்டிச்சென்று அவருடைய வீட்டின் அருகிலேயே சரமாரியாக வெட்டினார்கள். இதில் நிலை குலைந்த பிரதீஷ் சம்பவ இடத்திலேயே வெட்டுப் பட்டு வீழ்ந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய பிரதீஷை அவருடைய உறவினர்கள் உடனே ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே பிரதீஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது.

Advertisment

p

இதுகுறித்து தகவல் அறிந்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அபூர்வா குப்தா, கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பிரதீஷுக்கும், சாமிபிள்ளைதோட்டம் பகுதியை சேர்ந்த சிலருக்கும் பொங்கல் பண்டிகையையொட்டி தகராறு ஏற்பட்டதனால் முன்விரோதம் இருந்ததாகவும், அதன்காரணமாக பிரதீஷை சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்த சிலர் கொலை செய்திருக்கலாம் என்றும், ஒரே பெண்ணை பிரதீஷும் மற்றொருவரும் காதலித்து வந்துள்ளனர், அதுதொடர்பான பிரச்சினையிலும் கொலை நடந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலை செய்து தப்பி ஓடிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisment

சமீபகாலமாக புதுச்சேரியில் அடிக்கடி கொலை சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் நெல்லித்தோப்பில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண், அரியாங்குப்பத்தில் மீனவர் ராமு, ரெட்டிச்சாவடி ரியல் எஸ்டேட் அதிபர் சந்திரன், முத்தியால்பேட்டை மெக்கானிக் அய்யப்பன், நேற்று முன் நாள் வில்லியனூரில் பைனான்சியர் ராமலிங்கம் என தொடர்ந்து நடைபெற்று வரும் படுகொலைகளால் புதுச்சேரியில் பீதி ஏற்பட்டுள்ளது.