Skip to main content

புதுச்சேரியில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைக்கபட்ட குழுவிலிருந்து அ.தி.மு.க எம்.எல்.ஏ விலகல்!  

Published on 02/11/2019 | Edited on 02/11/2019

மறைந்த, தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியை கவுரவிக்கும் வகையில் புதுச்சேரி அரசு சார்பில் அவரது பெயரில் காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் ஒரு இருக்கையும் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கலைஞர் கருணாநிதிக்கு புதுச்சேரியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.
 

pondicherry news


இந்நிலையில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைப்பதற்காக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை தலைவராகவும், அமைச்சர்கள் நமச்சிவாயம்,  கந்தசாமி,  ஷாஜகான்,  மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன், முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன், எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, எம்.எல்.ஏக்கள் சிவா, ஜெயமூர்த்தி, அன்பழகன், கீதா ஆனந்தன், செல்வகணபதி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி சிவக்குமார், நாஜிம்,  இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன்  பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆகியோர்கள் உறுப்பினர்களாகவும், செய்தித்துறை இயக்குனர் வினய்ராஜ் உறுப்பினர் செயலர் என 21 பேர் கொண்ட சிலை அமைப்புக் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் கலைஞர் கருணாநிதி சிலை அமைப்புக் குழுவில் இருந்து விலகிக்கொள்வதாக அ.தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் முதலமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.அந்த கடிதத்தில் 'தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைப்பதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அதே நேரத்தில் கருணாநிதிக்கு முன் மரணமடைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அரசு சார்பில் சட்டசபையில் தாங்கள் அறிவித்தபடி சிலை அமைக்க குழு அமைக்காதது தங்களின் குறுகிய அரசியல் எண்ணத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. அதேபோல் புதுச்சேரியில் பிறந்து முதல்வராக மக்களுக்கு சேவை செய்த காங்கிரஸ் கட்சியை சார்ந்த எம்.ஓ.ஹெச்.பாருக், சண்முகம் போன்றவர்களுக்கு சிலை வைக்க அரசிடம் கோரிக்கை வைத்த போது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை காட்டி எம்.எல்.ஏக்களின் கோரிக்கைகளை நிராகரித்த தாங்கள் தற்போது கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்க குழு அமைத்து இருப்பது கூட்டணி கட்சியான திமுகவை திருப்திப்படுத்தும் செயலாகவே உள்ளது. அரசின் சட்ட முன்னுதாரண விதிகளை மீறி செயல்படுவது ஜனநாயகத்திற்கு எதிரான ஒன்றாகும்.
 

pondicherry news


புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசு மறைந்த தலைவர்களுக்கு அரசு சார்பில் பெருமை படுத்துவதில் கூட அரசியல் காழ்ப்புணர்ச்சி கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவது அதிமுகவினர் மனதை புண்படுத்துகிறது. அதனால் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்க அமைக்கப்பட்டிருக்கும் குழுவில் என்னால் செயல்படாத நிலை உள்ளதால் நான் அந்த குழுவில் இருந்து விலகிக் கொள்கிறேன். 

தாங்கள் தவறை உணர்ந்து திருத்திக் கொள்ளும் வகையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிலையை அமைப்பதற்கான  குழு அமைத்து அதில் என்று உறுப்பினராக சேர்த்துக் கொண்டால் மகிழ்ச்சி அடைவேன்' என குறிப்பிட்டுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.