"மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி இந்தியாவின் மதச்சார்பின்மையை குலைக்கும் விதமாக மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்ததத்தை திரும்பப் பெற வேண்டும்" என வலியுறுத்திபுதுச்சேரி காங்கிரஸ் சார்பில் மாபெரும் ஒற்றுமை பேரணி நடைபெற்றது.

pondicherry congress party in caa issue

Advertisment

Advertisment

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம் தலைமையில் ரேடியர் மில் அருகிலிருந்து புறப்பட்ட பேரணி மறைமலை அடிகள் சாலை, அண்ணாசாலை, ரங்கப் பிள்ளை வீதி வழியாகச் சென்று தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. இந்த பேரணியில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத், முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், வைத்திலிங்கம் எம்.பி உள்பட காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்

பேரணியின் முடிவில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, " இந்திய நாடு எல்லா மதத்தினருக்கும் சமமான நாடு. குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலமாக இன, மத கலவரத்தை மத்தியில் ஆளும் மோடி அரசு தூண்டியுள்ளது. மத்திய அரசு சிறுபான்மையினரை திட்டமிட்டு பழி வாங்குகிறது. மேலும் தேசிய குடிமக்கள் பதிவேடு, பொது சிவில் சட்டம் ஆகியவற்றின் மூலமாக நாட்டில் ரத்த கலவரத்தை உருவாக்க பாரதீய ஜனதா அரசு முயற்சிக்கிறது. நாட்டு மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். எனவே மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை எதிர்க்கும் கடமையும், பொறுப்பும் நமக்கு உள்ளது. இந்தியாவில் குடியுரிமை சட்டத்தை 14 மாநிலங்களின் முதலமைச்சர்கள் நிறைவேற்ற மாட்டோம் என்கின்றனர் அதேபோல் புதுச்சேரியிலும் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம். அதற்காக என்ன நிலைமை ஏற்பட்டாலும் கவலை இல்லை. மக்களுக்காக எந்த தியாகத்தை செய்யவும் தயாராக உள்ளோம். அதையும் மீறி அமுல்படுத்தினால் எங்கள் பிணத்தின் மேல் ஏறி தான் நிறைவேற்ற வேண்டும். நாட்டின் நலமும் மாநிலத்தின் நலமும் முக்கியம் " என்றார்.

பல்வேறு கட்சிகள் மற்றும் மதச்சார்பற்ற இயக்கங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இப்பேரணியில் கட்சி அடையாளங்கள் இன்றி கைகளில் தேசியக் கொடிகளை மட்டுமே ஏந்தி பாஜக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறு கோரி முழங்கியபடி பேரணியாக சென்றனர்.

இந்த பேரணியில் திமுக மாநில அமைப்பாளர் சிவா, எம்எல்ஏ வெங்கடேசன், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் என்ஆர் பாலன், லட்சுமிநாராயணன், அனந்தராமன், விஜயவேணி, தீப்பாய்ந்தான், ஜெயமூர்த்தி மற்றும் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள், சமூக அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு இயக்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.