Skip to main content

புதுச்சேரி : சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாள் முக்கிய விவாதங்கள், தீர்மானங்கள்!

Published on 07/09/2019 | Edited on 07/09/2019

2019-20ஆம் ஆண்டிற்கான புதுச்சேரியின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 14 நாட்கள் காலை, மாலை என மாறி மாறி நடைபெற்றது. கடைசி நாளான நேற்று பல்வேறு முக்கிய விவாதங்கள் நடைபெற்று, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

pondicherry assembly meeting

 

 

பூஜ்ய நேரத்தின் போது எம்.எல்.ஏக்களின் கேள்விக்களுக்கு பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு' தொடர்பாக உரிய ஆய்வு நடத்தி அதனை ஏற்கலாமா என்பது பற்று முடிவு செய்யப்படும் என்றார்.

அதேசமயம் இலவச அரிசி வழங்கப்படாத பிரச்சனை இரண்டு நாட்களாக தொடர்ந்து சட்டசபையில் எழுப்பப்பட்டது. அதற்கு, "இலவச அரிசி வழங்குவதற்கான டெண்டருக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்கவில்லை" என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதுதொடர்பாக கவர்னரை சந்தித்து பேசலாம் என்று ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். ஆனால் ‘ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில், நாங்கள் கவர்னரை சந்திக்க வரமாட்டோம். வேண்டுமானால் சட்டசபையில் தீர்மானம் கொண்டுவாருங்கள் ஆதரிக்கிறோம்” என்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ கூறினார்.

அதையடுத்து இலவச அரிசி வழங்கும் தீர்மானத்தை முதலமைச்சர் நாராயணசாமி கொண்டு வந்து பேசுகையில், “ புதுவை அரசின் முக்கிய நலத்திட்டமான இலவச அரிசி பல்வேறு இடையூறுகளுக்கு நடுவில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மாதம் தலா 20 கிலோ வழங்கப்பட்டு வந்தது. எனினும் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 10 கிலோவாக குறைத்தும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு அட்டைதாரர்களுக்கு மாதம் 20 கிலோ எனவும் தொடர்ந்து வழங்க உத்தரவிடப்பட்டது. பிறகு இலவச அரிசிக்கு பதிலாக பணமாக நேரடி பணப்பரிமாற்றம் மூலம் கிலோவுக்கு ரூ.30 வழங்கும் முடிவுக்கு பின் கடந்த ஆண்டில் 5 மாதங்கள் மாதத்துக்கு சிவப்பு அட்டைதாரர்களுக்கு ரூ.600-ம், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ.300-ம் வழங்கப்பட்டது. பெருவாரியான மக்கள் இலவச அரிசி வழங்கவேண்டும் என்று தெரிவித்ததால் அரிசி தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து அரிசி வழங்குமாறு வலியுறுத்தினார்கள்.

மேலும் அரிசி விலை அடிக்கடி உயர்ந்து வருவதால் பணமாக கூடுதல் முதலீடு செய்தால் மட்டுமே அரிசி வாங்க முடியும் என்ற நிலை பெரும்பாலான குடும்பங்களுக்கு ஏற்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் பணமாக வழங்குவதால் அதை அரிசிக்கு பயன்படுத்தாமல் வீண்விரயம் செய்துவிடுகிறார்கள்.

இலவச அரிசி தொடர்ந்து வழங்குவது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 7-ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் துறை இலவச அரிசி வழங்க டெண்டர் கோப்பு வைக்கப்பட்டது. இதுசம்பந்தமாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாததால் அரிசி வழங்க முடியவில்லை. இப்பேரவையின் முன்பு தொடர்ந்து அரிசி வழங்க தீர்மானம் நிறைவேற்றுமாறு அவைமுன் வைக்கப்படுகிறது. பிராந்திய வாரியாக அரிசி வழங்குவதற்கான டெண்டர் நடவடிக்கையை அரசு எடுக்க இந்த சட்டமன்றம் வலியுறுத்துகிறது. மாநில மக்களுக்கு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து அரிசி வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் “என்றார்.

அந்த தீர்மானத்துக்கு அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ் என எதிர்க்கட்சி  எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

சட்டசபை நேற்று மாலை 5.30 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது பேசிய அ.தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன், ‘சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்து 14 நாட்கள் ஆகிறது. நாளையுடன் ( இன்று) சட்டசபை முடிகிறது. அந்த கடிதம் பரிசீலனையில் இருக்கிறதா? அது எடுத்துக் கொள்ளப்பட்டதா? இல்லையா? சிறப்பு சட்டப்பேரவை கூட்டி முடிவு செய்ய போகிறீர்களா? என்பதை தெரிவிக்க வேண்டும்’ என்றார்.

அதற்கு முதலமைச்சர் நாராயணசாமி, ‘சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும். சபாநாயகரை யாரும் வலியுறுத்த முடியாது’ என்றார்.

சபாநாயகர் சிவக்கொழுந்தும், ‘சட்டசபை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், அசனா என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்  டி.பி.ஆர்.செல்வம், என்.எஸ்.ஜெ.ஜெயபால் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் சங்கர், செல்வகணபதி ஆகியோர் ஒட்டுமொத்தமாக சட்டசபையில் இருந்து வெளியேறினர்.

அதையடுத்து சட்டசபை கூட்டத்தொடர் நேற்றோடு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில்...” - கமல்ஹாசன் கண்டனம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
kamal about pudhucherry child issue

புதுச்சேரி மாநிலம் சோலை நகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல தெருவில் தனது நண்பர்களுடன் விளையாட சென்றார். ஆனால், சிறுமி மாலை ஆகியும் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். சிறுமி காணாமல் போனது குறித்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுமியை தேடி வந்தனர். அதனடிப்படையில் நேற்று மதியம் அங்குள்ள அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் சந்தேகத்திற்கிடமாக மூட்டை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் மூட்டையை கைப்பற்றிப் பிரித்து பார்த்த போது அதில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தார்.

இந்த கொலையில் கஞ்சா குடிக்கும் இளைஞர்கள் சிறுமியின் கை கால்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளனர் என சிறுமியின் தந்தை பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டபோது, சிறுமி மயங்கி விழுந்துள்ளதால் அவரை கொலை செய்து மூட்டை கட்டி சாக்கடையில் வீசி இருப்பது தெரியவந்தது. 

இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், எங்கே போகிறோம்? என்ற தலைப்பில் நிறைய சம்பவங்களின் மேற்கோள்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பெண்ணின் சகோதரனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான். குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. 

ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா? குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதைவஸ்துகள்தான். போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது. போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

ரஜினி பாட்டு பாடிய ஜப்பானிய ரசிகர் - வீடியோ வைரல்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
japanese sing rajinikanth muthu movie song

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ மாணவர்களுக்கான பன்னாட்டு வணிகத்துறை சார்பில் தொழிற்சாலை - கல்வி நிறுவனங்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மொத்தம் மூன்று நாள் நடக்கும் இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் ஜப்பான் நாட்டு ரெட்ரோ நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் கோபுகி சேன் கலந்து கொண்டார். 

அப்போது நடந்த கருத்தரங்கில் தமிழ் மொழி குறித்து பேசிய அவர், தமிழ் தனக்கு நன்றாகவே தெரியும் என்றும், தமிழ் சினிமா பாடலும் பாடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இறுதியாக ரஜினியின் முத்து படத்தில் இடம்பெற்ற ‘ஒருவன் ஒருவன் முதலாளி...’ பாடலை முழுவதுமாக பாடி அசத்தினார். அதை அங்கிருந்த மாணவர்கள் உள்பட அனைவருகளும் கைதட்டி ரசித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான படம் 'முத்து'. கவிதாலயா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியின் ஸ்டைல், காமெடி, ஆக்‌ஷன் என கமர்ஷியல் படங்களுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருந்ததால் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். கிட்டத்தட்ட 170 நாட்களுக்கு மேல் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. மேலும் ஜப்பானில் மட்டும் 180க்கும் மேற்பட்ட நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. அங்கு வசூலிலும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.