பொள்ளாச்சி சம்பவத்தால் அதிமுகவுக்கு பாதிப்பு இல்லை! பொன்னையன் சொல்கிறார்!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் அதிமுகவுக்கு தேர்தலில் எந்த பாதிப்பும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறினார்.

ponniyan

சேலம் 5 ரோடு அருகே, அதிமுக தேர்தல் அலுவலகத்தை திங்கள்கிழமை (மார்ச் 25, 2019) அக்கட்சியின் அமைப்பு செயலரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் திறந்து வைத்தார். இதையடுத்து, கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அப்போது அவர் பேசுகையில், ''தமிழகத்தில் இரட்டை இலை வெற்றி பெற்றால், அது மோடிக்குக் கிடைத்த வெற்றி. ஆரம்பத்தில் அதிமுக, பாஜக இடையே கருத்து வேறுபாடு இருந்தது உண்மைதான். ஆனால், தற்போது தமிழக முதல்வரின் அனைத்து கோரிக்கைகளுக்கும் மோடி உத்தரவாதம் அளித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு காரணமாக, அதற்கேற்ப தமிழகத்தில் கல்வித்தரம் மென்மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில், ''வரும் மக்களவை தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நாற்பது தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திருப்பரங்குன்றம் வேட்பாளர் போஸ் வெற்றி பெற்றது செல்லாது என உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. என்றாலும், அந்த வழக்கு இன்னும் முடிவு பெறவில்லை. நிலுவையில்தான் இருக்கிறது. அதனால் இப்போது அதைப்பற்றி எதுவும் கூற முடியாது.

பொள்ளாச்சி விவகாரத்திற்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த விவகாரத்தால் அதிமுகவின் வெற்றி பெறுவதில் பின்னடைவு ஏதும் இல்லை. திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக அரசு மீது பொய்யான புகார்களை கூறி வருகிறார். இதை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். முதல்வர் பிரச்சாரத்தில் மக்களிடம் வரவேற்பு இல்லை என்பதுபோல் எதிர்க்கட்சியினரும், சில ஊடகங்கள் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். முதல்வர் செல்லும் அனைத்து பகுதிகளிலும் பிரம்மாண்ட வரவேற்பு உள்ளது,'' என்றார்.

admk pollachi sexual abuse Ponnaiyan Sexual Abuse
இதையும் படியுங்கள்
Subscribe