Skip to main content

பொள்ளாச்சி நாசகார கும்பல் மீது கடும் நடவடிக்கை தேவை - ஆளும் கட்சி தலையீடுக்கு கண்டனம்: எஸ்.டி.பி.ஐ. 

Published on 12/03/2019 | Edited on 12/03/2019


 

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
 

பெண்களை சக்திப்படுத்துதல், பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான சட்டங்கள் விவாதங்களில் நிறைந்து நிற்கும் வேளையில், பொள்ளாச்சியில் ஏராளமான இளம்பெண்களை சமூக விரோத கும்பல் ஒன்று பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தி வந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி, கூட்டு பாலியல் வன்முறையை தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளது ஒரு நாசகார கும்பல்.
 

அதோடு பாதிக்கப்பட்ட பெண்களை வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்முறைகளை அரங்கேற்றியும், வசதிபடைத்த பெண்களிடமிருந்து பணத்தையும் பறித்துள்ளது அந்த கும்பல்.
 

அந்த கும்பல் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் மீதான விசாரணையின் போதே 250க்கும் அதிகமான பெண்கள் பாதிக்கப்பட்ட கொடூரம் வெளிவந்துள்ளது. எனினும் அந்த கும்பலில் இருந்த ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவரை காப்பாற்றும் நோக்கில் இந்த விசாரணையில் அரசியல் அழுத்தங்கள் நிலவுவதாக கூறப்படுகிறது. இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
 

Pollachi


 

ஆகவே குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் பாரபட்சமின்றி கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்துவதோடு, இதில் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளனரா என்பதையும் கண்டறிந்து அவர்கள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசையும், காவல்துறையையும் கேட்டுக்கொள்கிறேன்.
 

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தேசமாக இந்தியா உள்ளது என பல்வேறு தரப்பின் ஆய்வுகள், அறிக்கைகள் கூறும் நிலையில், பொள்ளாச்சி சம்பவம் மூலம் தமிழகமும் அத்தகையதொரு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் உள்ளதை அறிய முடிகிறது.
 

பொள்ளாச்சி விவகாரத்தில் ஆளும் கட்சியின் தலையீடு உள்ளதாக பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதால், குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் ஆளும் கட்சி பிரமுகர் தானாக முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது தமிழக முதல்வர் அந்த நபர் மீது நடவடிக்கை மேற்கொண்டு விசாரணை நேர்மையாக நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

பெண்களின் வாழ்க்கையையே கேள்விக் குறியாக்கும் இதுபோன்ற மிக மோசமான சூழல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சமுக வலைதளங்களே இத்தகைய குற்றங்கள் நடைபெற காரணம் என கூறப்படுவதால் காவல்துறை அதன் மீதான கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்.
 

பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான, ஒழுக்கம் மிகுந்த சூழலை உருவாக்க நாம் தவறினால் அது நமது சமூகத்தை மிகப்பெரிய ஆபத்தை நோக்கி இழுத்துச் சென்றுவிடும் என்பதை அரசும், பொது சமூகமும் உணர்ந்து பெண்களின் பாதுகாப்பை அனைத்து ரீதியிலும் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது. 

Next Story

அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி உறுதி? - வெளியான புதிய தகவல்! 

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
ADMK DMDK Alliance Confirmed New information released

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16 ஆம் தேதி 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அப்போது 4 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்திருந்திருந்தது. அதே சமயம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெறாததால், தே.மு.தி.க.விற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இல்லாததால் தற்போது 6 முதல் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்க உள்ளதாகவும் தே.மு.தி.க. சார்பாகத் தகவல் வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் அ.தி.மு..க துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகம் மற்றும் புதுவை 40 மக்களவைத் தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வரும் 24 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைக்கிறார்” எனத் தெரிவித்தார்.

ADMK DMDK Alliance Confirmed New information released

இந்நிலையில் அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே கூட்டணி நாளை (20.03.2024) உறுதியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடைபெறும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை முடிவில் தே.மு.தி.க.வுக்கு 4 அல்லது 5 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. (SDPI) ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நாளை காலை 10 மணிக்கு, தொகுதி உடன்பாடு கையெழுத்தாக உள்ளது. அப்போது புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு மத்திய சென்னை தொகுதியும் ஒதுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகச் சென்னையில் எடப்பாடி பழனிசாமி உடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் சந்தித்து கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.