பொள்ளாச்சி பாலியல் கொடூரம்- மேலும் ஒருவர் கைது!

pollachi incident one more person arrested in cbi

கடந்த 2019- ஆம் ஆண்டு கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், மணிவண்ணன், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இந்த வழக்கு விசாரணையானது சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு பொள்ளாச்சியைச் சேர்ந்த அருளானந்தம், ஹேரேன் பால், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இதனிடையே, பொள்ளாச்சி பாலியல் வழக்கை தினசரி விசாரித்து ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் என கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவரின் பெயர் அருண்குமார். இவர் பொள்ளாச்சி சூரம்பாளையத்தைச் சேர்ந்தவர். அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் உள்ளார். அவரின் தந்தை ஆட்டோ டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சதீஷின் நெருங்கிய நண்பர் அருண்குமார். சதீஷ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சி.பி.ஐ. அவரை கைது செய்துள்ளது. அதைத் தொடர்ந்து, அருண்குமாரை சி.பி.ஐ. அதிகாரிகள் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தியுள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

admk CBI covai leaders pollachi
இதையும் படியுங்கள்
Subscribe