
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வாயிலில் மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலை உள்ளது. இந்த சிலைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகி தினத்தில் அனைத்து கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று(25.1.2025) நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் தினத்தில் திமுக சார்பில் நகரச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில் சிதம்பரம் காந்தி சிலையிலிருந்து கட்சியினர் இருசக்கர வாகன பேரணியுடன் வந்து அண்ணாமலை பல்கலைக்கழக வாயிலில் உள்ள மொழிப்போர் தியாகி சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி சிதம்பரம் நகர மூத்த நகர மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ், விஜயராகவன், அப்பு, சந்திரசேகரன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல், அதிமுக சார்பில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியன் தலைமையில் காந்தி சிலையிலிருந்து 200க்கும் மேற்பட்டவர்களுடன் நடைப் பயணமாக வருகை தந்து தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் அரங்கத் தமிழ்மொழி தலைமையில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள். மதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் குணசேகரன் ராமலிங்கம், வழக்கறிஞர் மோகன சுந்தரம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.