Skip to main content

சிக்காமல் திருடச் சொல்லித் தந்த போலீஸ்காரர்; சிக்கிக்கொண்டதால் அம்பலம்

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

The policeman who told me to steal without getting caught; Exposed due to being trapped

 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை, சித்தோடு பகுதிகளில் கடந்த ஓரிரு ஆண்டுகளாக பல்வேறு திருட்டு, கொள்ளை சம்பவங்களும், வழிப்பறியும் நடைபெற்று வந்துள்ளன. இதுதொடர்பாக பெருந்துறை போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், பெருந்துறை, பவானி ரோட்டில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்து சென்ற 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவர்கள் அளித்த தகவலைக் கேட்டு போலீசாரே அதிர்ச்சியடைந்தனர்.

 

அந்த 3 பேரும் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பகலில் பணிபுரிந்து கொண்டும், இரவில் கொள்ளையடிக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஈரோடு ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வந்த ராஜீவ்காந்தி என்பவருக்கு சொந்தமானது என்றும், அவர்கள் கொள்ளையில் ஈடுபடுவதற்கு திட்டம் வகுத்துக் கொடுத்ததே ராஜீவ்காந்தி தான் என்றும் கூறியுள்ளனர்.

 

பிடிபட்ட மூவரில் ஒருவரான நெல்லை மாவட்டம், திசையன்விளை, மகாதேவன்குளத்தைச் சேர்ந்த கார்த்திக் என்கிற செந்தில்குமார், கடந்த 2021ல் பெருந்துறையில் மோட்டார்சைக்கிள் திருடிய குற்றத்துக்காக கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது, கோவை மத்திய சிறையில் இருந்து பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்த ராஜீவ்காந்தி செந்தில்குமாரை அழைத்து வந்தார். செந்தில்குமாரிடம் பேச்சு கொடுத்த ராஜீவ்காந்தி, போலீசாரிடம் சிக்காமல் திருடுவது எப்படி? என்று நான் சொல்லித்தருகிறேன். சிறை தண்டனை முடிந்ததும் என்னை வந்து பார் என்று கூறியுள்ளார்.

 

அதன்படி சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில்குமார் ராஜீவ்காந்தியை நேரில் சந்தித்தார். பெருந்துறை, பெருமாநல்லூர், சித்தோடு என அடுத்தடுத்து 3 இடங்களில் கொள்ளையடிப்பதற்கு திட்டம் வகுத்து தந்தார் ராஜீவ்காந்தி. செந்தில்குமார் தனது நண்பர்களான மதுரை, மேலூரைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற பாலசுப்பிரமணி (42), நாகம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி (31) ஆகியோருடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டார்.

 

பெருந்துறையில் ஒரு வீட்டில் இருந்து 6 பவுனும், சித்தோடில் முகமூடி அணிந்து உதவி கோட்ட மின்பொறியாளர் ஒருவரின் வீட்டில் இருந்து 24 பவுன் நகைகளையும் கொள்ளையடித்தனர். இதுதவிர பல வழிப்பறி சம்பவங்களிலும் இந்த கும்பல் ஈடுபட்டதும் தெரிய வந்தது. எந்தெந்த இடத்தில் திருடினால் போலீசாருக்கு சந்தேகம் வராது, எங்கெல்லாம் சிசிடிவி கேமரா இருக்காது, போலீசார் ரோந்து வராத பகுதிகள் என்பது போன்ற தகவல்களுடன் கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக இருந்தவர் ராஜீவ்காந்தி.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியைச் சேர்ந்த காவலர் ராஜீவ்காந்தி, முதலில் திருப்பூர் மாவட்டம், அவிநாசி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராக பணிபுரிந்து வந்தார். அப்போதே கஞ்சா வியாபாரிகள், லாட்டரி சீ்ட்டு விற்பவர், சீட்டாட்ட கிளப்கள், சாராயம் விற்பவர்களுடன் தொடர்பில் இருந்ததால் கணிசமாக சம்பாத்தியம் செய்து சொந்த வீடு, நிலம் போன்றவற்றை வாங்கினார். அங்கு பணிபுரிந்த பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்ததாக அந்த பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரில் பெருந்துறை காவல் நிலையத்துக்கு ராஜீவ்காந்தி பணிமாற்றம் செய்யப்பட்டார். அங்கும் பல்வேறு புகார்கள் வந்ததால் பெருந்துறை காவல் நிலையத்தில் இருந்து ஆயுதப்படை பிரிவுக்கு தூக்கியடிக்கப்பட்டார்.

 

அதன் பின்னர்தான் பழைய குற்றவாளியான செந்தில்குமார் தலைமையில் 3 பேரையும் களம் இறக்கி பல்வேறு வழிப்பறிகளில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம் ராஜீவ்காந்தி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். இதனை அடுத்து ராஜீவ் காந்தி உள்பட நான்கு பேரும் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் ராஜீவ் காந்தியை  காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்த போலீசார், அதன்படி நேற்று பெருந்துறை போலீசார் நீதிமன்றத்தில் அணுகி போலீஸ்காரர் ராஜீவ் காந்தியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். இதற்கு போலீசாருக்கு அனுமதி கிடைத்ததை அடுத்து ராஜீவ்காந்தியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்