Skip to main content

கைதியின் மனைவிக்கு பாலியல் தொல்லை; சிறைக்காவலர் பணியிடை நீக்கம்!      

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

 policeman was suspended for misbehaving with a prisoner  wife
விஜயகாந்த்

 

சேலத்தில், கைதியின் மனைவியிடம் செல்போனில் ஆபாச தகவல்களை அனுப்பி அத்துமீறல்களில் ஈடுபட்ட சிறைக்காவலர் அதிரடியாக  பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.    

 

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியைச் சேர்ந்தவர் குபேந்திரன் (35). இருசக்கர வாகனங்களை பழுதுபார்க்கும் பட்டறை நடத்தி வந்தார்.  இவருடைய மனைவி நிர்மலா (29). (கணவன், மனைவி ஆகியோரின் பெயர்கள் கற்பனையானவை). இவர்களுக்கு 13 வயதில் ஓர் ஆண்  குழந்தையும், 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. குபேந்திரன், இருசக்கர வாகனத்தை திருடியதாக மோகனூர் காவல்நிலைய காவல்துறையினர் கடந்த 2021ம் ஆண்டு கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.     

 

கணவரை பார்ப்பதற்காக நிர்மலா அவ்வப்போது சேலம் மத்திய சிறைக்குச் செல்வார். கைதிகளை பார்க்கச் செல்வோர், அங்கு கோரிக்கை மனு எழுதிக் கொடுக்க வேண்டும். அந்த மனுவை பரிசீலித்த பிறகே அனுமதி வழங்கப்படும். மனு எழுதும் பிரிவில் சிறைக்காவலர் விஜயகாந்த் பணியாற்றி வந்தார். நிர்மலா கணவரைக் காண்பதற்காக சிறைக்குச் சென்றபோது, அவருடைய செல்போன் எண்ணை விஜயகாந்த் பெற்றுக் கொண்டார்.  இதையடுத்து தினமும் நிர்மலாவின் செல்போன் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ஆபாச தகவல்களை அனுப்பி வந்துள்ளார். செல்போனில் அழைத்து, “எனக்கு உன்னை பாக்கணும் போல இருக்கு. உன் வீட்டுக்கு வரட்டுமா?” என்று கேட்டுள்ளார். அதற்கு ஆரம்பத்திலேயே நிர்மலா மறுத்துவிட்டபோதும், விடாமல் ஆபாச மொழிகளைப் பேசி தொந்தரவு செய்து வந்துள்ளார். 

 

ஒரு கட்டத்தில்  எல்லைமீறிய விஜயகாந்த், “சேலத்திற்கு வா, ஒருநாள் என்னுடன் தங்கிவிட்டுப் போ” என ஆபாசமாக குறுந்தகவல்  அனுப்பியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ந்து போன நிர்மலா, விரக்தியில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளவும் யோசித்ததாக கூறப்படுகிறது சிறைக்காவலர்  விஜயகாந்த், இந்த விவகாரத்தில் இன்னொரு நூதன உத்தியையும் பின்பற்றி வந்துள்ளார். நிர்மலாவின் கணவர் பிணையில் வெளியே வந்து  விட்டால், அவருக்கு செல்போனில் அழைத்து தொந்தரவு செய்வதில்லை. மேலும், தனது செல்போன் எண்ணையும் ஜாக்கிரதையாக பூட்டி  வைத்துக் கொள்வாராம்.  

 

 policeman was suspended for misbehaving with a prisoner  wife
எஸ்பி (பொறுப்பு) வினோத்

 

கடைசியாக கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி நிர்மலாவின் செல்போனுக்கு அழைத்த விஜயகாந்த் மீண்டும் ஆபாசமாகப் பேசியுள்ளார்.     இதற்கு எப்படியாவது முடிவு கட்ட வேண்டும் என்று தீர்மானித்த நிர்மலா, இதுகுறித்து சேலம் மத்திய சிறை எஸ்பி (பொறுப்பு) வினோத்திடம் புகார் அளித்தார்.      சிறைக்காவலர் மற்றும் நிர்மலா ஆகியோரின் செல்போன்களுக்கு கடந்த ஆறு மாதத்தில் எந்தெந்த எண்களில் இருந்து அழைப்புகள் வந்தன  என்பது குறித்த சிடிஆர் அறிக்கை பெறப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது.   இதில் காவலர் விஜயகாந்த், தனது உறவினர் ஒருவரின் பெயரில் ரகசியமாக செல்போன் எண்ணை வாங்கியிருப்பதும், அந்த எண்ணில் இருந்து  மட்டுமே நிர்மலாவை தொடர்பு கொண்டு வந்திருப்பதும் தெரிய வந்தது.இதையடுத்து விஜயகாந்த்தை, செப். 11ம் தேதி உடனடியாக பணியிடைநீக்கம் செய்து மத்திய சிறை எஸ்பி (பொறுப்பு) வினோத் உத்தரவிட்டார்.  இதுகுறித்த அறிக்கை மற்றும் முழுமையான விசாரணை அறிக்கை, சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் மற்றும் டிஜிபி அமரேஷ் புஜாரி  ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.