Policeman suspended for assaulting car park employee

Advertisment

இரண்டு சக்கர வாகன காப்பகத்தில் வாகனத்தை நிறுத்த இடமில்லை எனக்கூறிய ஊழியரைக் காவலர் ஒருவர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த சம்பவத்தில் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் தனியார் இருசக்கர வாகன காப்பகம் ஒன்று உள்ளது. இந்த இருசக்கர வாகன காப்பகத்திற்கு நன்னிலையில் காவலராக பணிபுரியும் வினோத்குமார் என்பவர் வாகனத்தை நிறுத்த வந்துள்ளார். அப்பொழுது ஊழியர் ஒருவர் இங்கு வாகனம் நிறுத்த தற்பொழுது இடமில்லை. நீங்கள் வேறு எங்காவது வாகனத்தை நிறுத்திக்கொள்ளுங்கள் எனக்கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வினோத் 'காவலரான எனக்கே இங்கு இடமில்லையா' என வாக்குவாதம் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த ஊழியரை கன்னத்தில் அறைந்தார். இந்த காட்சிகள் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

அங்கிருந்து சென்ற காவலர் வினோத் பேருந்து நிலையத்தில் பணியிலிருந்த காவலர் சுந்தரம் என்பவரை அழைத்துக் கொண்டுவந்து மீண்டும் தாக்கியுள்ளார். இந்த காட்சிகளை வைத்து இதுகுறித்து புகாரளிக்கப் போவதாக அந்த இருசக்கர வாகன காப்பகத்தின் உரிமையாளர் தெரிவித்திருந்தார். அதன்படி கும்பகோணம் மேற்கு காவல்நிலையத்தில் வாகன காப்பகத்தின் உரிமையாளர் புகாரளித்தார். அதேபோல் இந்த சம்பவம் குறித்து காவலர் வினோத் தரப்பில், தன் குழந்தை மற்றும் மனைவியுடன் வாகனத்தை நிறுத்த வந்தபொழுது ஊழியர் தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரத்தில் அறைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் வாகன காப்பக ஊழியரை தாக்கிய காவலர் வினோத்குமாரை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.