Skip to main content

“இறுதிச்சடங்கிற்கு எனது மனைவி வர வேண்டாம்” - கடிதம் எழுதி வைத்துவிட்டு காவலர் தற்கொலை

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

policeman lost their life after writing the letter

 

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (27). தமிழக காவல்துறையில் 2022 ஆம் ஆண்டு சேர்ந்த அருண்குமார் சென்னை ஆயுதப்படையில் உள்ள குதிரைப்படை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார்.

 

இவர் சென்னை அயனாவரம் வசந்தம் காலணியில் தனது சக காவலரான புஷ்பராஜ் என்பவருடன் வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் புஷ்பராஜ் வெளியே சென்று விட்டு நேற்று காலை வீடு திரும்பிய போது, அருண்குமார் சீருடையில் தூக்கில் தொங்கியபடி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதனைத் தொடர்ந்து புஷ்பராஜ் அயனாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்த அயனாவரம் காவல் ஆய்வாளர் முருகேசன், துணை ஆய்வாளர் மீனா உள்ளிட்ட காவல்துறையினர், அருண்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

அதனைத் தொடர்ந்து, அருண்குமார் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வந்துள்ளார்கள். அவர்கள் நடத்திய முதல் கட்ட விசாரணையில், திருநெல்வேலி ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வந்த பிரியாவை அருண்குமார் காதலித்து வந்துள்ளார். அதன் பின்னர், கடந்த மார்ச் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். இருவரின் திருமணத்திற்கு பிறகு பணிநிமித்தமாக பிரியா திருநெல்வேலி ஆயுதப்படை காவலராகவும் அருண்குமார் சென்னையிலும் பணியாற்றி வந்துள்ளார்கள்.

 

அருண்குமாரின் தந்தை வாய் பேச முடியாதவர். தாயாருக்கு கண்பார்வை கிடையாது. அவர்கள் இருவரும் சொந்த ஊரான விருதுநகரில் வாழ்ந்து வந்துள்ளார்கள். இதனால் வயதான பெற்றோரை பார்த்துக்கொள்ள முடியவில்லை என்ற ஏக்கம் அருண்குமாருக்கு இருந்துள்ளது. அருண்குமார் உடன்பிறந்தவர்கள் இரண்டு தம்பிகள். அதிலொருவர் டெல்லியில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். மற்றொருவர் மின்சாரத் துறையில் பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

 

இந்த நிலையில், காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரியா சில மாதங்களாகவே அருண்குமாருடன் சரியாகப் பேசாமல் அவரை உதாசீனப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அருண்குமாருக்கும் பிரியாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் இருவரும் தொலைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அருண்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவந்தது.

 

அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அருண்குமார் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்தனர். காவல்துறையினர் நடத்திய சோதனையில் அருண்குமார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு 4 பக்கங்களுக்கு கடிதம் எழுதி வைத்துள்ளார் என்று தெரிந்தது. அருண்குமார் எழுதிய அந்த கடிதத்தில், “கடந்த சில நாட்களாகவே எனது மனைவி பேசும் பேச்சுகள் என்னை மிகவும் பாதித்துள்ளது. நான் இதுவரை கேட்டிராத அருவருக்கத்தக்க வார்த்தைகளால் அவர் பேசி வருகிறார். நான் எனது மனைவிக்கு தொலைப்பேசியில் அழைத்து  உன்னைப் பார்க்க ஊருக்கு வருகிறேன் என்று தெரிவித்தால், ‘நீ ஏன் என்னைப் பார்க்க வர வேண்டும். அதெல்லாம் வர வேண்டாம்’ என்று கூறுகிறார்.

 

திருமணமான ஒருவன் தனது மனைவியுடன் இருப்பதையும், அவருடன் சினிமாவுக்கு, கடைக்கு செல்வதையும்தான் விரும்புவான். அதுபோல்தான் நானும் விரும்பினேன். ஆனால் அது நடக்கவில்லை. எனது மனைவி பேசிய பேச்சுகளைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறேன். மேலும், எனது உடலை என் தம்பி டெல்லியில் இருந்து வந்ததும் அவனிடம் ஒப்படைத்து, பிறகு அடக்கம் செய்ய வேண்டும். இந்த கடிதத்தை ஒரு நகல் எடுத்து காவல்துறையினர் கண்டிப்பாக எனது தம்பியிடம் கொடுக்க வேண்டும். என்னுடைய தம்பி மனைவிகள் இருவரும் வயதான எனது பெற்றோரை பார்த்துக்கொள்ள வேண்டும். எனது இறுதிச்சடங்கு உள்ளிட்ட எதிலும் எனது மனைவி பிரியா மற்றும் அவர் குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளக் கூடாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், அந்த கடிதத்தில் அருண்குமார் தனது மனைவியை ‘குட்டிம்மா’ என்று குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். அதில், “என்னை என் தாய் ஒழுங்காக வளர்க்கவில்லை என நீ கூறுகிறாய். ஆனால், நான் இதுவரை உன்னை ஒரு வார்த்தை கூட அசிங்கமாகப் பேசியதில்லை. இதில் இருந்து என்னை என் தாய் ஒழுங்காகத்தான் வளர்த்துள்ளார். ஆனால், நீ பேசிய வார்த்தைகளை கொஞ்சம் நினைவுபடுத்திப் பார். அதில் உன்னை உன் தாய் எப்படி வளர்த்துள்ளார்கள் என்று தெரியும். எனது பெற்றோர் என்னை வளர்த்ததில் எந்த தவறும் இல்லை. அதனால்தான் நீ என்னை இவ்வளவு பேசிய பிறகும் நான் உன்னை எந்த ஒரு தொந்தரவும் செய்யாமல் தற்கொலை செய்து கொள்கிறேன்” என்று உருக்கமாக எழுதியிருந்தார்.

 

இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட காவலர் அருண்குமார், தனது நண்பரிடம் பேசிய ஆடியோ ஒன்று நேற்று வெளியானது. அதில், ‘ரொம்ப சிரமமாக உள்ளது அண்ணா. நானும் என் மனைவியும் ஆளுக்கு ஒரு பக்கம் வேலை செய்து வருகிறோம். எனது திருமணத்திற்கு 10 நாட்கள்தான் விடுமுறை கிடைத்தது. போனில்தான் வாழ்க்கை ஓடுது. போனில்தான் குடும்பம் நடத்தி வருகிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கோபி விசாரணை நடத்தி வருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.