
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது வண்டிப்பெரியார் காவல்நிலையம். இந்த காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர்கள் உடை மாற்றவும், கழிவறைக்கு செல்லவும் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் அறை ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை வண்டிப்பெரியார் காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் வண்டிப்பெரியார் காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவர் தான் உடைமாற்றும் வீடியோவை யாரோ ரகசியமாக படம் பிடித்து மிரட்டுவதாக அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், அந்த புகாரின் நாங்கள் உடை மாற்றும் அறையில் நான்கு ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண் காவலர்கள் உடைமாற்றும் வீடியோக்களை ரகசியமாக யாரோ பதிவு செய்து வைத்துள்ளார். அந்த காட்சிகளை தனக்கு அனுப்பி இதனை வெளியிடாமல் இருக்கத் தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர். பெண் காவலர் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமராக்களை பொருத்தியது அதே காவல்நிலையத்தில் பணிபுரியும் வைசாக்(40) என்பதை கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து வைசாக்கை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் காவலர்கள் உடைமாற்றும் அறைக்கும் பக்கத்திலேயே வைசாக்கின் வீடு இருப்பதால், யாரும் இல்லாத நேரத்தில் அந்த அறைக்குச் சென்று ரகசிய கேமராக்கள் பொருத்தியுள்ளார். மேலும், அதனைத் தனது செல்போனுடன் இணைத்திருக்கிறார். அதன் மூலம் பெண் காவலர்கள் உடைமாற்றுவதை தனது போனில் பதிவு செய்து வைத்திருந்த வைசாக் அதனை சம்பந்தப்பட்ட பெண் காவலர்களிடம் காட்டி தனது ஆசைக்கு இணங்குமாறு கூறி மிரட்டி வந்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் புகார் கொடுத்த பெண் காவலருக்கு வீடியோவை அனுப்பி ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியதை வைசாக் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.