Skip to main content

பிரிந்துசென்ற மனைவி... திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாத காதலி... கொலையாளியான காவலர்...

Published on 13/02/2022 | Edited on 13/02/2022

 

police surrenders in bodi police station on a case

 

தேனி மாவட்டம் போடியில் சனிக்கிழமை நள்ளிரவு பெண் வனக்காவலரை கழுத்தை நெறித்து கொலை செய்த ஆயுதப்படை காவலர் மதுரை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

 

மதுரை சதாசிவம் நகர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த பொன்பாண்டி என்பவரின் மனைவி சரண்யா. இவர் தேனி வனச்சரக அலுவலகத்தில் வனக்காவலராக பணிபுரிந்து வந்தார். போடியில் வனத்துறை அலுவலகம் அருகே ரமேஷ் என்பவரது வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் நான்கு வருடம் முன்பு இவரது கணவர் சாலை விபத்தில் இறந்து விட்டார். இரண்டு குழந்தைகளும் சரண்யாவின் பெற்றோர் வீட்டில் உள்ளனர்.

 

இந்த சூழலில், தனியாக வசித்து வந்த சரண்யாவை கொலை செய்துவிட்டதாக மதுரை அனுப்பானடியை சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகன் திருமுருகன் என்பவர் மதுரை கீரைத்துறை காவல் நிலையத்தில் ஞாயிறன்று அதிகாலை சரணடைந்தார். இதனையடுத்து கீரைத்துறை போலீஸார் தகவலின் பேரில் போடி நகர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீஸார் போடியில் சரண்யா வசித்து வந்த வீட்டில் சென்று பார்த்தபோது சரண்யா கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரிந்தது.

 

விசாரணையில் சரண்யாவும், திருமுருகனும் மதுரை பகுதியில் வசித்து வந்த நிலையில், இருவரும் காவல்துறையில் சேருவதற்காகப் பயிற்சி வகுப்புக்குச் சென்றபோது பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். பின்னர், திருமுருகனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணமான நிலையில், சரண்யாவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதால் திருமுருகனின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனையடுத்து திருமுருகன் அடிக்கடி போடிக்கு வந்து சரண்யா வீட்டில் தங்கிவிட்டுச் செல்வது வழக்கம்  நேற்று சனிக்கிழமை இரவிலும் திருமுருகன் வழக்கம்போல் வந்துள்ளார். அப்போது, அவர்களுக்குள் திருமணம் செய்வது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதில் திருமுருகன் சரண்யாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். திருமுருகன் மதுரை ஆயுதப்படை காவல் பிரிவில் சிறப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார். 

 

இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போடி நகர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்தில் காவல்துறை மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு செய்ததில், கொலை நடந்த வீட்டிலிருந்து ஓடிய நாய் போடி பேருந்து நிலையம் வரை சென்றது. குற்றம் செய்தவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், கைரேகை நிபுணர்களும் போலீஸாரும் சம்பவ இடத்தில் தடயங்களைச் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.