Skip to main content

உணவகத்தில் வாடிக்கையாளர்களை தாக்கிய போலீஸ் எஸ்.ஐ..!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

Police SI assaults customers at restaurant

 

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றின் பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அதில் கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு தளர்வு காலங்களில் கொண்டு வந்த கட்டுப்பாடு விதிமுறைகளை தமிழக அரசு நடைமுறையில் கொண்டுவந்துள்ளது. 

 

இந்த நிலையில், கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று (11.04.2021) இரவு 10 மணியளவில் கடையை மூடிக்கொண்டிருந்தார். அப்போது காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து என்பவர் அந்த கடைக்குள் சென்று, தனது லத்தியால் அங்குள்ள ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் தாக்கியுள்ளார்.

 

இதையடுத்து, கடையின் உரிமையாளர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். புகாரில் “அரசு 11 மணி வரை 50% இருக்கைகளுடன் ஹோட்டலை திறந்து வைத்திருக்கலாம் என தெரிவித்திருக்கிறது. இருந்தபோதிலும் காவல் உதவி ஆய்வாளர் கடைக்குள் புகுந்து 10.20 மணிக்கே கடையை மூட வலியுறுத்தி, லத்தியால் தாக்கியது மிகவும் மோசமான நடவடிக்கையாகும். பின்னர் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

 

இதனையடுத்து காவல் ஆணையர் இதனை விசாரித்து, புகாரில் சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் முத்துவை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கோவை ரைசிங்’ - திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Coimbatore Rising DMK election report release

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை மக்களவைத் தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கையை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டனர். இந்த தேர்தல் அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் பன்னோக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும். சென்னை, கோவை, தூத்துக்குடி இடையே பிரத்யேக சரக்கு வழித்தடம் அமைக்கப்படும். மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் - கோபிசெட்டிபாளையம் - ஈரோடு இடையே அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும். ரயில் பராமரிப்பு வசதிகள் கோவையில் உருவாக்கப்படும்.

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். கோவையில் நகர போக்குவரத்து ஆணையம் அமைக்கப்படும். கோவையில் புதிய தொழில் ஹப் தொடங்கப்படும். கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் குறு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு தொழில் பூங்கா அமைக்கப்படும். கோவையில் உள்ள நீர்நிலைகளில் நீர் மாசுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“தமிழ்நாடு பிடிக்கும் என்று பிரதமர் பேசுவதெல்லாம் போலிப்பாசம்” - முதல்வர் விளாசல்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Everything that the PM says about liking Tamilnadu is hypocrisy

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இத்தகைய சூழலில் கோவை செட்டிபாளையத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் நேற்று (12.04.2024) ஒரே மேடையில் பரப்புரை மேற்கொண்டனர். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்றையும் இணைத்துள்ளார்.

மேலும் அந்த பதிவில், “கோவையில் கூடிய கூட்டம் டெல்லியில் ஏற்படவுள்ள நல்ல மாற்றத்திற்கான அடையாளம். அமைதியை விரும்பும் கோவைக்குள் கலவரக் கட்சியான பாஜக நுழையலாமா?. தொழில் வளர்ச்சி போய்விடாதா? நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியுமா?. கோவைக்கு வரவிருந்த மிகப்பெரும் தொழில்திட்டத்தை மிரட்டி குஜராத்துக்கு அனுப்பியது பாஜக. கோவை மேல் ஏன் இத்தனை வன்மம்?. தமிழ் - தமிழ்நாடு பிடிக்கும் என்று பிரதமர் பேசுவதெல்லாம், போலிப்பாசம். வெறும் வெளிவேடம். மக்களோடு மக்களாக வாழ்ந்து, கழகத்தின் கொள்கை உடன்பிறப்பாக என் அன்பு சகோதரர் ராகுல் காந்தி உருவாக்கியிருக்கும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் நிறைவேற இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.