Skip to main content

பரபரப்பான திருச்சி; இரண்டு ரவுடிகளின் மீது துப்பாக்கிச் சூடு

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

Police shot two rowdies in Trichy

 

திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள உய்யக்கொண்டான் கால்வாயை ஒட்டிய கரைப்பகுதியில் இன்று மதியம் உறையூர் காவல் நிலைய ஆய்வாளர் மோகன் மற்றும் காவலர் சிற்றரசு உள்ளிட்டவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த துரை மற்றும் அவரது சகோதரர் சோமு என்கிற சோமசுந்தரம் ஆகியோரிடம் விசாரணை செய்த போது, அவர்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் ஆய்வாளர் மோகன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சிற்றரசு, அசோக் ஆகியோரை வெட்டியதில் கையில் பலத்த காயம் ஏற்பட்டதால் காவல் துறையினர் துரை மற்றும் சோமு இருவரையும் காலில் துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடித்தனர்.

 

இவர்கள் திருச்சி மேலகல்கண்டார்கோட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி இளவரசன் புதுக்கோட்டையில் ஜாமீன் கையெழுத்திட சென்றபோது அவரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில், இவர்கள் மீது திருட்டு மற்றும் கொள்ளை கொலை என மொத்தம் 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது காயமடைந்த இரண்டு ரவுடிகள் மற்றும் 3 காவலர்கள் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Police shot two rowdies in Trichy

 

திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக சத்தியப்பிரியா பொறுப்பேற்றதிலிருந்து, திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில், சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், குற்றச்செயல்களில் ஈடுபடும் கெட்ட நடத்தைக்காரர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அவர் பதவியேற்றதில் இருந்தே திருச்சியில் பல முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

 

நாளை திருவாரூர் செல்லவிருக்கும் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் செல்கிறார். இந்த நிலையில் தேடப்பட்டு வந்த இரு ரவுடிகள் இன்று திருச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் திருச்சியில் உள்ள ரவுடிகளின் மத்தியில் கிலியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.