திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் கடந்த 16ம் தேதி அக்பர் அலி என்பவருக்கு சொந்தமான காரை அதே பகுதியில் உள்ள மெக்கானிக் கடை முன்பு நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் அவரது கார் நள்ளிரவு நேரத்தில் திருடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அக்பர் அலி, வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தனிப்படை அமைத்து உடனடியாக குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார்.
கொள்ளையடிக்கப்பட்ட கார் வேலூரில் வலம் வருவதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததின் பேரில், அங்கு விரைந்து சென்று கார் கொள்ளையனை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
கொள்ளையனிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அக்கொள்ளையன் கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்த பிரபல செம்மரம் மற்றும் கார் கடத்தல், சாராய கடத்தல், செய்யும் சுரேஷ்(47) என்பது தெரியவந்தது. இவர் மீது வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட செம்மரம் மற்றும் கார் கடத்தல், சாராய கடத்தல், வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், மேலும் திருடப்படுகின்ற கார் மற்றும் டாடா ஏ.சி உள்ளிட்ட வாகனங்களை செம்மரம் மற்றும் பிரபல சாராய வியாபாரிகளுக்கு சப்ளை செய்து வந்ததாகவும், ஹெல்மெட் அணிந்து காவல்துறைக்கு போக்கு காட்டி வந்ததாகவும் காவல்துறை விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பின்னர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி காளிமுத்துவேல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.