ஈரோடு கொல்லம்பாளையம், சோலார் பிரிவு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சரக்கு வாகனம் ஒன்று வந்தது. அந்த வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வாகனத்திலிருந்த நான்கு பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் பாண்டிச்சேரியைச் சேர்ந்த சத்யராஜ், விக்னேஷ், உதயகுமார், செல்வம் எனத் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சரக்கு வாகனத்தைச் சோதனை செய்த போலீசார் வாகனத்தில் இருக்கும் ரகசிய அறையை கண்டு பிடித்தனர். இதனையடுத்து அந்த அறையைதிறந்துபார்த்தபோது 42 பெட்டிகளில் 2,016 மதுபாட்டில்கள் கடத்திக்கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சரக்கு வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீசார், நான்கு பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.