Skip to main content

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: அலைபேசியைக் கைப்பற்றி கோவை தடய ஆய்வகத்துக்கு அனுப்பியது காவல்துறை!

Published on 12/12/2021 | Edited on 12/12/2021

 

Police seize mobile phone and send it to Coimbatore forensic lab

 

குன்னூரில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் கடைசியாக பறந்த காட்சி என வெளியான வீடியோவின் உண்மைத் தன்மையை அறிய, அந்த காட்சியைப் படம் பிடித்த அலைபேசியை காவல்துறையினர் தடவியல் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். 

 

முப்படைகளின் தலைமை தளபதி உள்ளிட்ட 13 பேரின் உயிரைப் பறித்த ஹெலிகாப்டர் விபத்துக் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் விசாரணை அதிகாரியாக நீலகிரி மாவட்ட காவல்துறை ஏ.டி.எஸ்.பி. முத்துமாணிக்கத்தை நியமித்துள்ளது. 

 

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக காட்டேரி பகுதியில் மேகக் கூட்டங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் பறந்ததாக வெளியான வீடியோவைப் படம் பிடித்த நபரின் அலைபேசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அந்த காட்சிகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய, அந்த அலைபேசியை கோவையில் உள்ள தடவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளனர். 

 

விபத்து நேரிட்ட பகுதியில் உயர் மின்னழுத்தக் கம்பிகள் உள்ளனவா என்ற விவரங்களைத் தருமாறு மின்வாரியத்துக்கு நீலகிரி மாவட்ட காவல்துறை கடிதம் அனுப்பி உள்ளது. மேலும், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய போது, அங்கு நிலவிய வானிலை குறித்து தெளிவான தகவல்களைக் கேட்டு, சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. 

 

இவைத் தவிர காட்டேரிக்கு அருகே உள்ள வனப்பகுதிகளில் அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், மத்திய அரசு நியமித்துள்ள விசாரணை அதிகாரி மன்வேந்திரசிங் தலைமையிலான குழுவினர், நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.   

 

சார்ந்த செய்திகள்

Next Story

அத்துமீறிய அதிமுக, பாஜக - காவல்துறை வழக்குப் பதிவு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 Violating AIADMK, BJP- Police case registered

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று திமுக, அதிமுக, பாஜகவினர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த இடங்களில் மோதிக்கொண்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில், நேற்று நீலகிரியில் அதிமுக வேட்பாளர்களும் பாஜக வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் நடத்தை வழி முறைகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். அப்போது தேர்தல் நடைமுறையை மீறி பெருங்கூட்டத்துடன் வந்ததால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறைக்கும் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தேர்தல் நடத்தை வழிமுறைகளையும் மீறி பட்டாசு வெடித்தது; அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர்த்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்து கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியது; காவல்துறையினரைப் பணி செய்ய விடாமல் தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக பாஜக மற்றும் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Ooty famous private schools email incident

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இரு பிரபல சர்வதேசத் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று (19.03.2024) மதியம் 02.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் 3 வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதே சமயம் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து மாணவர்களைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி (08.02.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.