
கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ரூபன் குமாருக்கு கடலூர் கூத்தபாக்கம் ராஜாங்கம் செட்டியார் நகரில் சொகுசு காரில் போதை புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக ரகசியத் தகவல் வந்துள்ளது. அவரது உத்தரவின் பேரில் முதுநகர் காவல் ஆய்வாளர் கதிரவன், துணை காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், திருப்பாப்புலியூர் உதவி ஆய்வாளர் கார்த்தி கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் பாபு வயது (49).
ஆலப்பாக்கம் மதுர காளியம்மன் கோவில் தெரு, கலியபெருமாள் மகன் அய்யன்பெருமாள்(39), குருவி நத்தம், முல்லை நகர், நடராஜன் மகன் சரவணன் (38) ஆகியோர் 2 சொகுசு காரில் குட்கா போதைப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இருந்தனர். அவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் அதில் ஹான்ஸ், கூலிப் போதை பாக்கு பாக்கெட்டுகள் 350 கிலோ இருந்ததை கைப்பற்றினர்.
இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து மேலும் விசாரணையில் கடலூர் முதுநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய காரைக்காடு பிள்ளையார் கோவில் தெரு, தங்கராஜ் மகன் ஆனந்த மணி வயது 46, சங்கோலிகுப்பம் சுப்பிரமணிய கோயில் தெரு தேவஇரக்கம் மகன் இமானுவேல் வயது 45 ஆகியோர் பதுக்கி வைத்திருந்த சுமார் 126 கிலோ போதை குட்கா புகையிலையை கைப்பற்றி கைது செய்து கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மொத்த மதிப்பு ரூ 7 லட்சம் போதை குட்கா பொருட்களை பிடித்த காவல்துறையினருக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.