புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் மேலபுள்ளாண்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 35). வடகாடு - மாங்காடு பேப்பர்மில் சாலையில் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் கடை நடத்தி வந்தார். இவர் ஊர்க்காவல்படையில் பணியாற்றிய பானுமதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து வசந்தன் என்ற குழந்தை உள்ள நிலையில் ஜாதி பாகுபாட்டால் பானுமதியை பாஸ்கர் குடும்பத்தினர் ஏற்கவில்லை. அதனால் பானுமதி பிரிந்து சென்றுவிட்டார். ஆனால் குழந்தை வசந்தனைத் தந்தை பாஸ்கரே வளர்த்து வந்துள்ளார். ஆனால் வசந்தனையும் பாஸ்கரின் குடும்பத்தினரும் ஏற்கவில்லை. இந்த சூழ்நிலையில் வசந்தன் வடகாடு புள்ளாச்சிகுடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில் தான் கடந்த 26ஆம் தேதி பாஸ்கரன் அவரது அண்ணன் மனைவியுடன் தகாத உறவில் இருந்ததாக கூறி மாலத்தீவில் இருந்து ஊருக்கு வந்த அண்ணன் முருகேசன் தம்பி பாஸ்கரனைக் கல்லைப் போட்டும் கயிற்றால் கழுத்தை இறுக்கியும் கொன்றுவவிட்டு விபத்து போல காட்ட சாலையோரம் பைக்குடன் பாஸ்கரை  தள்ளிவிட்டு நாடகமாடியது அம்பலமாகி முருகேசன், அவரது மனைவி விமலாராணி, அப்பா வீரப்பன், அம்மா வசந்தா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய சூழலில் தான் தாயும் இன்றி தந்தையும் இல்லாமல் கலங்கி நின்ற 5 வயது சிறுவனை பாஸ்கர் உறவினர்கள் யாரும் வளர்க்க முன்வரவில்லை. இதனால் ஆதரவற்று நின்ற சிறுவனைப் பார்த்த போலீசார் அவரது பாதுகாப்பிற்காகப் புதுக்கோட்டையில் ஒரு காப்பகத்தில் சேர்த்துள்ளனர். தாய்வழி உறவும் இன்றி தந்தை வழி உறவுகள் ஆதரவும் இல்லாமல் தவித்து நின்ற சிறுவனைப் பார்த்துக் கலங்காத காக்கிச் சட்டைகளே இல்லை.