Police notice to TTF Vasan

விதிமுறைகளை மீறி கார் ஓட்டியதாகச் சர்ச்சைக்குரிய யூடியூபர் டிடிஎஃப் வாசன் இரண்டு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே காஞ்சிபுரம் பகுதியில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுப் பல நாட்கள் சிறைத் தண்டனைக்குப் பிறகு டிடிஎஃப் வாசன் வெளியே வந்திருந்தார். டிடிஎஃப் வாசன் பலமுறை ஜாமீன் கோரியும் கிடைக்காமல் இறுதியாக 10 ஆண்டுகள் இருசக்கர வாகனத்தை இயக்கக் கூடாது என நிபந்தனையோடு ஜாமீன் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி நண்பர்களுடன் டிடிஎஃப் வாசன் காரில் சென்றார். அப்பொழுது மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே செல்போனில் பேசியபடியே காரை இயக்கியதாகக் கூறப்படுகிறது. இதை யூடியூப் சேனலில் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக மணி பாரதி என்பவர் கொடுத்தபுகாரின் அடிப்படையில், மதுரை அண்ணா நகர் காவல் துறையினர் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்து மீண்டும் அவரை கைது செய்தனர்.

சென்னையில் வைத்து கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனை மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது டிடிஎஃப் வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “டிடிஎஃப் வாசன் வளரும் இளைஞர், படத்தில் நடிக்கவும் உள்ளார். அதுமட்டுமல்லாமல் வீடியோவுக்கு மன்னிப்பு கூட கேட்கிறோம். மேலும் தலைக்கவசம் வழங்குவது, மழை வெள்ளத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட நற்பணிகளை செய்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

Advertisment

இருதரப்பு வாதங்களை கேட்டு அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, டிடிஎஃப் வாசனுக்கு ஜாமின் வழங்கி 10 நாட்களுக்கு மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி, காவல் நிலையத்திற்கு நேரில் வந்து டிடிஎஃப் வாசன் கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுப்பட்டதாக டிடிஎஃப் வாசனுக்கு காவல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது. அதில், 10 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில் காரை இயக்கியது எப்படி? என கேள்வில் எழுப்பியுள்ள காவல்துறை இது குறித்து நாளை(3.6.2024) ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் வழங்கியுள்ளது.