‘அம்மன் கோயிலுக்கு கூழ் ஊத்த போறோம்...’ ‘கோவில் திருவிழா நடத்த போறோம்..’ ‘மாபெரும் கிரிக்கெட் போட்டி நடத்த போறோம்’ என களவாணி படத்தில் வரும் காட்சியைப் போல் பிள்ளையார் கோவில் கட்டப்போவதாக வசூல் வேட்டையில் களம் இறங்கினர் திருச்சி மாவட்ட தாத்தைங்கார்பேட்டை போலீசார்.
திருச்சி மாவட்டம், தா.பேட்டை காவல் நிலையம் அருகே பிள்ளையார் கோவில் கட்டுவதாக கூறி அப்பகுதியில் உள்ள வணிகர்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் காவல் உதவி ஆய்வாளர்கள் இருவர், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் என மூன்று பேரும் களவாணி பட விமல் போல கடை கடையாக வசூல் செய்துள்ளனர்.
இவ்வாறு சுமார் 4 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. காவல் நிலையம் அருகே பிள்ளையார் கோவில் கட்டும் பணியும் தொடங்கி சமீபத்தில் அதற்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது, நன்கொடையாக வழங்கிய சிலர் கோயிலை சென்று பார்த்தபோது மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். லட்சக் கணக்கில் வசூல் செய்து விட்டு சுமார் 50,000 மதிப்பில் மூன்று புறமும் சுவர் எடுத்து மேலே ஒரு கூரையை மாட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நன்கொடையாளர்களும் பொதுமக்களும், தா.பேட்டை பகுதியினரும் புலம்பி தீர்த்து வருகின்றனர்.
பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல் துறையே இப்படி வசூல் வேட்டையில் இறங்கி விநாயகருக்கு விபூதி அடிக்கலாமா, இது குறித்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. மற்றும் காவல் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதியினரின் ஆதங்கமாக உள்ளது.